Last Updated : 30 Jun, 2020 02:06 PM

 

Published : 30 Jun 2020 02:06 PM
Last Updated : 30 Jun 2020 02:06 PM

’ஆரோக்கிய போலீஸ்! மகிழ்ச்சி போலீஸ்!’ –டெல்லி காவல்துறையினரின் மனஉளைச்சலை போக்கும் சிறப்பு திட்டங்கள்

’ஆரோக்கியப் போலீஸ்! மகிழ்ச்சி போலீஸ்!’ (ஹெல்தி போலீஸ்! ஹேப்பி போலீஸ்1)’ எனும் பெயரில் டெல்லி காவல்துறையினருக்காக ஒரு புதிய திட்டம் அமலாகி உள்ளது. இது கரோனா காலத்தில் டெல்லி போலீஸாரின் மனஉளைச்சலை போக்கப் பயன்படுவதாக அமைந்துள்ளது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துதலில் அதன் காவல்துறையினரின் பங்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த பரவல் தற்போது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களுக்கும் தொற்றத் துவங்கி, உயிர்களும் பலியாகி வருகிறது.

இந்த கரோனா அச்சத்தால், தம் குடும்பப் பிரச்சனை, மனஅழுத்தம் என பல்வேறு மனஉளைச்சலும் டெல்லி காவல்துறையினர் இடையே ஏற்பட்டு வருகிறது. இதை அவர்கள் தம் பணிகளின் போது பொதுமக்களிடம் காட்டி விடும் அபாயம் உள்ளது.

இதை தடுக்க, ஆரோக்கியப் போலீஸ்! மகிழ்ச்சி போலீஸ்!’ எனும் பெயரில் ஒரு சிறப்பு திட்டம் அமலாக்கி உள்ளது. இதற்கு டெல்லி காவல்துறையினர் இடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லி காவல்துறையின் துணை ஆணையர்களில் ஒருவரான சஞ்சய் பாட்டியா கூறும்போது, ‘கரோனா பரவல் சூழலில் எங்கள் பணி பெரும் சவாலாகி விட்டது. இதில் உடல் உழைப்பு மட்டும் அன்றி மனஉளைச்சலும் அதிகமாகி உள்ளது.

இவற்றை குறிப்பிட்டு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன. அதில் உள்ள தேவைகளின் அடிப்படையில் அவ்வப்போது போலீஸாருக்கு உகந்த மருத்துவ சிகிச்சையை மனநலம் உள்ளிட்ட மருத்துவர்கள் உதவி அளிக்கப்பட உள்ளது.’ எனத் தெரிவித்தார்.

முதல்கட்டமாக, டெல்லியில் மத்திய மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய மாவட்டத்தில் மட்டும் சுமார் 2700 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதில், சுமார் 1500 பூர்த்தி செய்யப்பட்டு மருத்துவ உதவி கோரப்பட்டுள்ளது. இவர்களது அந்தரங்க உரிமையை காக்க வேண்டி அவர்களது பெயர்களை வெளியிடப்படவில்லை.

இவர்களுக்காக சிறப்பு மருத்துவர்களுடன் பேசி டெல்லி காவல்துறையினரால் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளின் காவல்பணியில் உள்ள போலீஸாரில் சிலர் பரவலுக்கு அஞ்சி தம் குடும்பத்தாரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வருவதாகத் தெரிகிறது.

இவர்கள் தனியாக ஒரு அறை எடுத்து தங்கி வருகின்றனர். இதன் உயர் அதிகாரிகளிலும் பலர் கரோனாவிற்கு அஞ்சி தம் குடும்பத்தினரை சொந்த ஊர்களுக்கு அனுப்பி விட்டு தனிமையில் வாடும் சூழலும் உருவாகி உள்ளது.

இதுபோல், பல்வேறு வகை மனஉளைச்சல் காரணமாக பல போலீஸாருக்கு ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற நோய்கள் புதிதாக ஏற்பட்டும் வருவதாகக் கருதப்படுகிறது. இதனால், டெல்லி காவல்துறையின் தலைமையக ஆலோசனையின் பேரில் இந்த ‘ஆரோக்கியப் போலீஸ்! மகிழ்ச்சி போலீஸ்!’ திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x