Last Updated : 29 Jun, 2020 03:03 PM

 

Published : 29 Jun 2020 03:03 PM
Last Updated : 29 Jun 2020 03:03 PM

கரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்த டெல்லி அரசு மருத்துவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.

கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பால் 2,623 பேர் உயிரிழந்துள்ளனர். 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைச் சமாளிக்க லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் அரசு மருத்துவமனை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே முழுமையான கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அந்த மருத்துவமனையில் மயக்கமருந்துப் பிரிவில் மூத்த மருத்துவராக இருந்தவர் அசீம் குப்தா (வயது 52).

உயிரிழந்த மருத்துவர் அசீம் குப்தா : படம் உதவி | ட்விட்டர்

தற்போது டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் தீவிரமாக மருத்துவர் குப்தா பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட குப்தாவுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்குக் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு உறுதியானது. இதில் குப்தாவின் மனைவி உடல்நலம் தேறினார். ஆனால், குப்தா உடல்நிலை மோசமடைந்து தெற்கு டெல்லியில் உள்ள சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமாகி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார்.

மருத்துவர் குப்தாவின் மறைவுக்கு முதல்வர் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

முதல்வர் கேஜ்ரிவால் காணொலி மூலம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “எல்என்ஜே மருத்துவமனையின் மூத்த மருத்துவர் அசீம் குப்தா மறைவு வேதனையைத் தருகிறது. கடந்த சில மாதங்களாக ஐசியு பிரிவில் இருந்து நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல் பணியாற்றினார். அவரின் அயராத பணி குறித்து சக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.

குப்தாவின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவர் நல்வாய்ப்பாக குணமடைந்தார். மருத்துவர் குப்தா போன்ற மனிதர்களால்தான் ஊக்கம் பெற்று மற்றவர்கள் கரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நமக்கெல்லாம் மிகப்பெரிய உந்து சக்தியாக குப்தா இருந்து வருகிறார், அவரின் உத்வேகத்துக்கும், மனிதநேயச் சேவைக்கும் தலைவணங்குகிறேன். டெல்லி அரசு ஏற்கெனவே அறிவித்தது போல் குப்தாவின் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்.

விலை மதிக்கமுடியாத உயிருக்கு இந்தப் பணம் சிறிய தொகைதான். தேசத்தின் சார்பில், டெல்லி மக்களின் சார்பில், டெல்லி அரசு குப்தா குடும்பத்தாருக்கு இந்தப் பணத்தை வழங்கும்” எனத் தெரிவித்தார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் குறிப்பில், “எல்என்ஜேபி மருத்துவமனையின் மூத்த மருத்துவர் அசீம் குப்தா மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனை அடைந்தேன். கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியில் இருந்துபோராடி உயிர் நீத்த வீரர். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x