Published : 29 Jun 2020 01:08 PM
Last Updated : 29 Jun 2020 01:08 PM

டெல்லியில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கி: கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் முதன்முறையாக பிளாஸ்மா வங்கியை உருவாக்கவுள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமடைந்துளளது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் 2 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகிறது.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்டோர் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக மருத்துவமனைகள், பரிசோதனைகள், கரோனா சிகிச்சைக்காக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

‘‘டெல்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரும், கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவருமான அசீம் குப்தா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் நிரம்பி வருகிறது.

கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிளாஸ்மா சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். இதற்காக முதன்முறையாக பிளாஸ்மா வங்கியை உருவாக்கவுள்ளோம். நன்கொடையாக ரத்த பிளாஸ்மாவை வழங்ககூடியவர்கள் வழங்கலாம்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x