Published : 29 Jun 2020 12:51 PM
Last Updated : 29 Jun 2020 12:51 PM

வந்தேபாரத் மிஷன்; 3 மணிநேரத்தில் முடிந்த முன்பதிவு; ஆஸ்திரேலிய இந்தியர்கள் தவிப்பு

வந்தேபாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்புவதற்காக விமான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது. ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சர்வதேச விமான சேவையை கடந்த மார்ச் 23-ம் தேதி மத்திய அரசு நிறுத்தியது. இதனால் வெளிநாடுகளில் சுற்றுலா, பணி நிமித்தம், சிகிச்சை, உறவினர்கள் சந்திப்பு போன்றவற்றுக்காகச் சென்ற இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் பெரிதும் சிரமப்பட்டார்கள்.

இதையடுத்து, மே 6-ம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகத்துக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் அழைத்து வருகிறது மத்திய அரசு.

ஜூலை மாதம் நடுப்பகுதியில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திக் சிங் பூரி தெரிவித்திருந்தார். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஜூலை 15-ம் தேதிவரை சர்வதேச விமானப் போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே 3 கட்டங்கள் முடிந்த நிலையில் ஜூலை 3-ம் தேதி முதல் 4-வது கட்ட வந்தே பாரத் தி்ட்டம் தொடங்கப்படுகிறது. இந்த தி்ட்டத்தில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிரிகிஸ்தான், சவுதி அரேபியா, வங்கதேசம், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்படுகிறது.

இதில் 38 விமானங்கள் பிரிட்டனுக்கும், 32 விமானங்கள் அமெரிக்காவுக்கும் சவுதி அரேபியாவுக்கு 26 விமானங்களும் இயக்கப்பட உள்ளன.மூன்றாவது கட்ட வந்தே பாரத் திட்டம் கடந்த 10-ம் தேதி தொடங்கி ஜூலை 4-ம் தேதி முடிகிறது. இதில் பல்வேறு நாடுகளுக்கு 495 விமானங்களை இயக்கி வருகிறது.

இந்தநிலையில் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இருந்து ஜூலை 1-ம் தேதியும் மெல்போர்ன் நகரில் இருந்து ஜூலை 14-ம் தேதியும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருந்து வந்தேபாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியா திரும்புவதற்காக நேற்று விமான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது. ஆனால் 3 மணிநேரத்திலேயே பயணச் சீட்டு முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் புக்கிங் செய்வதற்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x