

ராணுவத்தின் அடுத்த தலைமை தளபதியாக தல்பீர் சிங் சுகாக் (59) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு செவ்வாய்க்கிழமை பிறப் பித்தது.
லெப்டினென்ட் தல்பீர் சிங்கை புதிய தலைமை தளபதியாக நியமிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிய பரிந்துரைக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையின் நியமன விவகாரக் குழு ஒப்புதல் வழங்கி யுள்ளது.
தற்போது தலைமை தளபதியாக இருக்கும் ஜெனரல் விக்ரம் சிங்கின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது. இந்த நியமன விவகாரத்தை புதிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற பாஜகவின் எதிர்ப்பையும் மீறி புதிய தளபதியை மத்திய அரசு நியமித்துள்ளது.
தற்போது ராணுவ துணை தளபதியாக உள்ள சுகாக் ஜூலை 31ம் தேதி தலைமை தளபதியாக பதவியேற்கிறார். 30 மாதங்கள் இந்த பதவியில் இருப்பார்.
சித்தோர்கரில் உள்ள சைனிக் பள்ளியில் பயிற்சி முடித்தவரான சுகாக் 1970ம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் சேர்ந்தார். 1974 ஜூனில் கூர்க்கா துப்பாக்கிப் படை பிரிவில் எல்லைப் படையில் இணைந்தார். -