Published : 28 Jun 2020 04:10 PM
Last Updated : 28 Jun 2020 04:10 PM

ஹைதராபாத் நிஜாம்  ‘வந்தேமாதரம்’ பாட அனுமதி மறுத்த போது எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தார்: முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவைப் புகழ்ந்து பேசிய மோடி 

புதுடெல்லி

ஜூன்28ம் தேதியான இன்று மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பிரதமர் மோடி தன் மன் கி பாத்- மனதின் குரல் வானொலி உரையில் அஞ்சலி செலுத்தி அவரைப்பற்றி பெருமையாகப் பேசினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பி.வி.நரசிம்ம ராவ் பற்றி புகழ்ந்து கூறியதாவது:

இன்று ஜூன் மாதம் 28ஆம் தேதியன்று பாரதம் தனது காலஞ்சென்ற பிரதமர் ஒருவருக்குத் தனது சிரத்தாஞ்சலிகளைச் செலுத்துகிறது. அவர் இக்கட்டான சூழ்நிலையில் தேசத்துக்குத் தலைமை ஏற்றார். நமது இந்த முன்னாள் பிரதம மந்திரி, பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் தான்.

அவரது நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. பி.வி. நரசிம்ம ராவ் அவர்களைப் பற்றிப் பேசும் வேளையில், அவரது அரசியல் தலைமை தொடர்பான பரிமாணமும் நம் முன்னே வருகிறது; அதே வேளையில், அவர் பன்மொழிப் பண்டிதர் என்பதும் அதே அளவு உண்மை. இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் அவரால் பேச முடிந்திருந்தது. அவர் ஒருபுறம் இந்திய பண்பாடுகளில் ஊறியிருந்தாலும், மற்றொரு புறத்தில், அவருக்கு மேற்கத்திய இலக்கியம்-விஞ்ஞானம் ஆகியவை தொடர்பான ஞானமும் இருந்தது.
அவர் பாரதத்தின் அதிக அளவு அனுபவமுடைய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். அவருடைய வாழ்கையில் இன்னொரு பக்கமும் உண்டு, இதைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். நண்பர்களே, நரசிம்ம ராவ் அவர்கள் தமது சிறுபிராயத்திலேயே சுதந்திரப் போராட்டக் களத்தில் குதித்து விட்டார். ஹைதராபாதின் நிஜாம், வந்தே மாதரம் பாட அனுமதி மறுத்த போது, அவருக்கு எதிராக போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே. சிறிய வயதிலேயே நரசிம்ம ராவ் அவர்கள் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதில் முன்னணி வகித்தார். தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதில் அவர் எந்த

முயற்சியையும் விட்டு வைத்ததில்லை. நரசிம்ம ராவ் அவர்களிடம் இருந்த சரித்திரம் பற்றிய புரிதலும் ஆச்சரியமானது. மிக எளிய பின்புலத்திலிருந்து வந்த ராவ் அவர்களின் முன்னேற்றம், கல்வி மீது அவர் அளித்த அழுத்தம், கற்றலில் அவருக்கு இருந்த பேரார்வம், இவை அனைத்துடனும் கூட, தலைமை தாங்கும் திறம் – இவை அனைத்தும் நினைவில் கொள்ள வேண்டியவை. நரசிம்ம ராவ் அவர்களின் நூற்றாண்டின் போது, நீங்கள் அனைவரும், அவருடைய வாழ்க்கை, சிந்தனைகள் ஆகியவை பற்றி எத்தனை முடியுமோ அத்தனை அறிந்து கொள்ள முயலுங்கள். நான் மீண்டும் ஒருமுறை அவருக்கு என்னுடைய சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணிக்கிறேன்.

இவ்வாறு தன் உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x