Last Updated : 28 Jun, 2020 02:32 PM

 

Published : 28 Jun 2020 02:32 PM
Last Updated : 28 Jun 2020 02:32 PM

ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸ் பேசலாமா? எல்லை விவகாரத்தில் ஆழ்ந்த அரசியல் அறிவின்றி பேசுவது வருத்தமளிக்கிறது: ராகுல்காந்தி மீது அமித் ஷா தாக்கு

உள்துறை அமைச்சர் அமிித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

எல்லையில் சீனாவுடனும், பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் மிகப்பெரிய அரசியல் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ராகுல் காந்தி ஆழ்ந்த அரசியல் அறிவின்றி பேசுவது வருத்தமளிக்கிறது. 1962-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காட்டமாகத் தெரிவித்தார்

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15-ம் தேதி இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும், அதைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி சீனாவிடம் சரணடைந்துவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பாஜக சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது
இந்த சூழலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா , ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் ராகுல் காந்தி எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமயைாக விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அமித் ஷா பதில் அளித்ததாவது:

இந்தியாவுக்கு எதிராக செய்யப்படும் அனைத்து விதமான பிரச்சாரங்களையும் முறியடிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நாட்டின் மிகப்பெரிய கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த ராகுல் காந்தி, எல்லையில் சீனா, பாகிஸ்தானுடன் பிரச்சினை தீவிரமாக இருக்கும் போது, இதுபோன்று ஆழ்ந்த அரசியல் அறிவின்றி பேசுவது வருத்தமளிக்கிறது

சரண்டர் மோடி எனும் ஹேஸ்டேக்கை ராகுல் காந்தி உருவாக்கி ட்விட்டரில் வைரலாக்கியது குறித்து ராகுல் காந்தி சுயபரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால், ஹேஸ்டேக் உருவாக்குதலால் பாகிஸ்தானும், சீனாவும்தான் ஊக்கம் பெறுவார்கள்.

நம் நாட்டின் பிரதமரை கிண்டல் செய்து காங்கிரஸ் தலைவர் உருவாக்கிய ஹேஸ்டேக்கை, சீனாவும், பாகிஸ்தானும் வரவேற்றால் காங்கிரஸ் கட்சிக்குதான் அது அவமானம்

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

இந்திய எல்லைக்குள் ஏதேனும் சீன ராணுவ வீரர்கள் ஆக்கிரமித்துள்ளார்களா என்ற கேள்வி்க்கு அமித் ஷா அளித்த பதிலில் “ எல்லையில் பதற்றமான சூழல் இருக்கும்போது இதுபோன்ற கேள்விக்கு பதில் அளிக்க இது உகந்த நேரம் அல்ல. விரைவில் இதற்கு பதில் அளிக்கிறேன்.

ராகுல் காந்தி ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்கள் வைத்தார். எல்லை விவகாரம் குறித்து அவர் விரிவாக பேச விருப்பம் இருந்தால், நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசலாம். கடந்த 1962-ம் ஆண்டிலிருந்து இப்போதுவரை விவாதிப்பதற்கு நாங்கள் தயார். விவாதத்துக்கு யாரும் அச்சப்படவி்ல்லை.

ஆனால், நமது வீரர்கள் எல்லையில் பதற்றமான சூழலில் இருக்கும்போது, மத்திய அரசும் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துவரும்போது, இதுபோன்று ராகுல் காந்தி பேசுவது சீனா, பாகிஸ்தானுக்குத்தான் சாகமாக அமையும்” எனத் தெரிவித்தார்

எமர்ஜென்ஸி குறித்து நீங்கள் விமர்சித்தபோது, அதற்கு பதிலாக பாஜகவில் ஜனநாயகம் இல்லை என்று காங்கிரஸ் விமர்சிக்கிறதே என்று நெறியாளர் கேட்டபோது, அதற்கு அமித் ஷா பதில் அளித்துப் பேசுகையில் “ இந்திரா காந்திக்குப்பின், சோனியா காந்தி குடும்பத்திலிருந்து யாரேனும் வெளிநபர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்கிறார்களா. அப்படி இருக்கும்போது, ஜனநாயகத்தைப் பற்றி காங்கிரஸார் பேசுகிறார்கள்

ஜனநாயகம் என்பது முழுமையான வார்த்தை. ஒழுக்கம், சுதந்திரம்தான் அதற்கு முழுமையான மதிப்பை வழங்கும். இவற்றை தவிர்த்து நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். பாஜகவில் தலைவராக அத்வானி,ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என பலர் வந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களா. நான் தலைவராக இருந்தேன், இப்போது ஜெ.பி. நட்டா இருக்கிறார். அனைவரும் வெவ்வேறு தளத்தைச் சேர்ந்தவர்கள்தானே. யாரேனும் ஒரு குடும்பத்திலிருந்து வந்தோம் என்று சொல்ல முடியுமா

ஆனால், காங்கிரஸில் இந்திரா காந்திக்குப்பின், சோனியா காந்தி குடும்பத்தினர் மட்டுமே தலைவராக இருக்கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.

கரோனா காலத்தில் நான் எந்த அரசியலும் செய்ய விரும்பவில்லை. ஆனால் என்னுடைய கடந்த 10 ஆண்டுகாலட்வி்ட்டர் கணக்கைப் பார்த்தால், எர்ஜென்ஸி நினைவுதினத்தன்றுகருத்துக்களை பதிவிட்டிருப்பேன். அறிக்கை விட்டிருப்பேன். எமர்ஜென்ஸியை மக்கள் மறக்கக்கூடாது.

அது ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துப்பார்த்தது. மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் யாரும் அதை மறக்கக்கூடாது. இது குறித்து விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும். ஒரு கட்சியை மட்டும் சாடவில்லை, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x