Last Updated : 27 Jun, 2020 02:35 PM

 

Published : 27 Jun 2020 02:35 PM
Last Updated : 27 Jun 2020 02:35 PM

டெல்லி தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் ஆன்லைன் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் 90% மதிப்பெண்: விசாரணைக்கு வலியுறுத்தும் பெற்றோர்

டெல்லி தொழில்நுட்பப் பல்கலைகழகத்தின் (டிடியு) பெரும்பாலான மாணவர்களுக்கு 90 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆன்லைன் தேர்வின் இந்த முடிவுகள், திறமைக்கானதா?, காப்பி அடித்ததா? என விசாரிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமலான ஊரடங்கால் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பயிலும் மாணவர்கள் தம் இறுதித்தேர்வு எழுத முடியாமல் தவித்தனர்.

இவற்றை இணையதளம் உதவியுடன் ஆன்லைனில் நடத்துவதா? வேண்டாமா? என பல்வேறு கருத்து வேறுபாடுகள் உருவாகின. இந்த சூழலில் டிடியுவில் இறுதியாண்டு மாணவர்களின் இறுதிப்பருவத் தேர்வு அவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் நடைபெற்றன.

இதன் முடிவுகள் கடந்த 14-ம் தேதி வெளியானது. இதில், டிடியுவின் பெரும்பாலான மாணவர்கள் 90 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இது ஊரடங்கினால் கிடைத்த நாட்களில் படித்து எழுதியதால் கிடைத்ததா? ஆன்லைன் தேர்வு என்பதால் காப்பி அடிக்கப்பட்டதா? எனப் புகார் கிளம்பி உள்ளது. இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலை. நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாதிக்கப்பட்ட டிடியு மாணவர்களின் பெற்றோர்கள் வட்டாரம் கூறும்போது, ‘‘ஒரே ஒரு கோணத்தில் மட்டும் பொருத்தப்பட்ட லேப்டாப்பின் ஆன்லைன் கேமிரா முன்பாக தேர்வு எழுதப்பட்டது.

மற்ற கோணங்களில் நடப்பதை ஆசிரியர்களால் ஆன்லைனில் கண்காணிப்பது முடியாது. இதில் மாணவர்களே தானாக முன்வந்து பொறுப்புடன் காப்பி அடிக்காமல் எழுதி இருக்க வாய்ப்புகள் குறைவு.’’ எனத் தெரிவித்தனர்.

சாதாரண நாட்களில் வினாத்தாள்கள் உன்னிப்பாகத் திருத்தியதை போல் இந்தமுறை ஆசிரியர்கள் அதை செய்திருக்க முடியாது. இதன் காரணமாகவே, இந்தமுறை டிடியுவின் கடந்த காலங்களில் பெற்றிராத அளவில் மதிப்பெண்களை மாணவர்களை பெற்றுள்ளதாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதன் மீதான புகார்களை மறுக்கும் டிடியுவின் துணைவேந்தரான யோகேஷ் சிங் கூறும்போது, ‘‘இந்த வருடம் மாணவர்களுக்கானக் கொள்குறிவகை(அப்ஜக்டிவ்) கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டிருந்தது காரணமாக இருக்கலாம்.

இதற்காக உருவாக்கப்பட்ட செயலி வழியாக நடத்தப்பட்ட தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெறும் வாய்ப்புகள் இல்லை.’’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே நாட்டின் பல முக்கிய உயர்கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் தேர்வு நடத்துவது குறித்து ஒரேவகையான முடிவுகள் எடுக்காமல் உள்ளன. ஒடிஸா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ஐஐடி மட்டும் ஆன்லைன் தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ளது.

மற்ற ஐஐடிக்கள் மாணவர்களின் கடைசி ஆண்டு பருவத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்களை அளிக்க ஆலோசித்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x