Last Updated : 27 Jun, 2020 02:37 PM

 

Published : 27 Jun 2020 02:37 PM
Last Updated : 27 Jun 2020 02:37 PM

அரசியலமைப்புச் சட்டம்தான் அரசை வழிநடத்தும் ஒளிவிளக்கு: பிரதமர் மோடி பேச்சு

அரசியலமைப்புச் சட்டம்தான் அரசை வழிநடத்தும் ஒளிவிளக்கு. நம்பிக்கைகள், சாதி, மொழி, இனம் ஆகியவற்றை வைத்து இந்த அரசு பாகுபாடு காட்டாது. 130 கோடி மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் அரசு செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் ரேவ் ஜோஸப் மார் தோமாவின் 90-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

''இந்த அரசு மக்களுக்கான எந்த முடிவுகளையும் எடுக்கும்போதும், டெல்லியில் உள்ள வசதியான அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு எடுக்கவில்லை. மக்களிடம் இருந்து கருத்துகளைக் கேட்டு அதன் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறோம்.

இந்த உற்சாகம்தான் ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிக்கணக்கு தேவை என்பதை செயல்படுத்த ஊக்கமாக இருந்தது. மக்களின் நம்பிக்கைகள், பாலினம், சாதி, மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துப் பார்த்து மத்திய அரசு செயல்படவில்லை.

130 கோடி மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்துச் செயல்படுகிறோம். அரசியலமைப்புச் சட்டம்தான் இந்த அரசை வழிநடத்தும் ஒளிவிளக்காகும்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கில் மக்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, மற்ற நாடுகளைவிட கரோனா பாதிப்பிலும், உயிரிழப்பிலும் நாம் குறைவாகத்தான் இருக்கிறோம். அதைச் சிறப்பாகக் கையாண்டுள்ளோம்.

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்படுவோர், குணமடைந்துவருவோர் சதவீதம் அதிகரித்து வருகிறது. மக்களால் நடத்தப்படும் இந்தப் போராட்டம் நல்ல முடிவுகளைத் தந்துள்ளது.

இனிவரும் காலத்திலும் மக்கள் கவனத்தை இழந்துவிடக்கூடாது. இப்போது கூட நாம் கூடுதல் கவனத்தில் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விலகலைப் பின்பற்ற வேண்டும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஏசு கிறிஸ்துவின் தூதர் புனித தாமஸின் உன்னதக் கொள்கைகளுடன் மார் தோமா தேவாலயம் நெருக்கமான தொடர்புடையது. மனிதநேயத்தின் உணர்வுடன் செயல்படும் மார் தோமா தேவாலயம், மக்கள் மனதில் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்க உழைத்து வருகிறது.

மருத்துவம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்களுக்கு இந்த தேவாலாயம் சேவை செய்கிறது. இந்த தேசத்தின் நலனுக்காகவும், சமூகத்துக்காகவும் மார் தோமா தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், ஏழ்மையை விரட்டும் ஆர்வமாக மார் தோமா இருந்தார்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x