Last Updated : 27 Jun, 2020 11:29 AM

 

Published : 27 Jun 2020 11:29 AM
Last Updated : 27 Jun 2020 11:29 AM

ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் கூட்டுறவு வங்கிகள்: அவசரச் சட்டம் பிறப்பித்தார் குடியரசுத் தலைவர்

ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையில் அனைத்து நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டுவரும் வங்கிகள் ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்துக்கு( 2020) ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவசரச் சட்டம் பிறப்பித்தார்.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ல்தான் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இது கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தும் என்று மத்திய அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கீழ் கொண்டுவர கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பஞ்சாப் கூட்டுறவு வங்கி, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார்கள். அதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

கூட்டுறவு வங்கியில் உள்ள 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.84 லட்சம் கோடி பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவே விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து இன்று அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''நாட்டில் உள்ள 1,482 நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகள், 58 பன்முக மாநிலக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த அவசரச் சட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும், கூட்டுறவு வங்கிகள் வலுப்படும். நிர்வாகம் மேம்படும், கூட்டுறவுகளின் செயல்திறன் மேம்பட்டு முதலீடும் அதிகரிக்கும்.
இந்த அவசரச் சட்டத்தால் மாநிலக் கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் கூட்டுறவு பதிவாளர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் அதிகாரம், எந்த விதத்திலும் பாதிக்காது.

இந்தத் திருத்தங்கள் முதன்மை வேளாண்மைக் கடன் சொசைட்டிக்கு (பிஏசிஎஸ்) அல்லது வேளாண் தொழிலுக்கு நீண்டகாலக் கடன் அளிக்கும் கூட்டுறவு சொசைட்டிக்குப் பொருந்தாது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் 45-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதலீட்டாளர்களின் நலன் காக்கும் வகையில் வங்கியை மறுகட்டமைத்தல், முதலீட்டாளர்கள் மற்றும் வங்கி முறையை முறையாகப் பராமரித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x