

உத்தரபிரதேசத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சார்பில் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து மருந்து தயாரிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ஆய்வை அப்பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறை நடத்த உள்ளது. இத்துறையின் பேராசிரியராக இருந்த எஸ்.என்.திரிபாதி என்பவர் சுமார் 40 வருடங்களுக்கு முன் சுவாச நோய்க்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தார். சுவாச நோயாளிகளை எளிதில் குணப்படுத்தும் இந்த மருந்து கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கும் அதிக பலன் தரும் எனக் கருதப்படுகிறது. அப்பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறை இதை கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு பயன்படுத்தி பரிசோதிக்க முடிவு செய்துள்ளது.
வாரணாசியில் உள்ள இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரியும் அமைந்துள்ளது. இங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் இளம் வயதுள்ளவர்களுக்கு இப்பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறையின் சுவாச நோய்க்கான மருந்தை வழங்கி ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த 22-ம்தேதி அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத துறையின் டீன் பேராசிரியர் யாமினி பூஷன் திரிபாதி கூறும்போது, "சுவாச நோயாளிகளுக்கு ஏற்படுவது போன்ற பாதிப்பு கரோனாதொற்றாளர்களுக்கும் உள்ளது. இதற்காக எங்கள் துறை கண்டுபிடித்த மருந்தை செயல்முறைப்படுத்த அனுமதித்ததுடன் ரூ.10 லட்சம் நிதியாகவும் ஆயுஷ் அமைச்சகம் அளித்துள்ளது. இந்த திட்டத்தை ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம்" என்றார்.
‘ஸ்ரீஷாதி கசாயம்’ என்ற இந்தமருந்தில் ஸ்ரீசங் வசா, முலேதி, தேஜாபட்டா மற்றும் கந்தகாரி உள்ளிட்ட மூலிகைகள் கலந்துள்ளன. இதில் கரோனா வைரஸ் மருந்துக்கான ஆய்வில், தேவைக்குஏற்ப மேலும் சில மூலிகைகள்சேர்க்கப்பட உள்ளன. இந்தி மொழியின் பெயரிலான இந்த மூலிகைகள் பரவலாக கிடைப்பதால் இந்த மருந்து தயாரிக்கப்பட்ட பின் மிகக்குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.