Published : 27 Jun 2020 07:40 AM
Last Updated : 27 Jun 2020 07:40 AM

பிளாஸ்மா சிகிச்சையால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தகவல்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:

டெல்லியில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தபோதும் நிலைமையை கட்டுக்குள் வைத்துள்ளோம். கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் இந்தசிகிச்சை தற்போது வழங்கப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சை அறிமுகம்செய்யப்பட்ட பின்னர் நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. வயதான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றுவது கடினமான செயலாக உள்ளது. ஆனால் இந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் அவர்களது நிலைமை மோசமடையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

தற்போது வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் 3 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. வைரஸ் தொற்று சோதனையை 3 மடங்கு அதிகரித்துள்ளோம். டெல்லியில் இதுவரை 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸிலிருந்து மீண்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x