Published : 24 Jun 2020 07:33 PM
Last Updated : 24 Jun 2020 07:33 PM

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகள் பற்றி ஆராயும் ஆணையம்: பதவிக் காலத்தை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல்

மத்தியப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்காக 340வது சட்டப் பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்தியப் பட்டியலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகள் பற்றி ஆராய்வதற்கான ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு - அதாவது 31.1.2021 வரையில் நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உருவாக்குதல் உள்ளிட்ட தாக்கம்:

இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமல் செய்யும் போது, இப்போதைய இதர பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தும், மத்திய அரசுப் பணிகள் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டில் பெரிய ஆதாயங்கள் எதுவும் பெறாத நிலையில் இருக்கும் பிரிவினருக்கு, பயன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஓ.பி.சி.களுக்கான மத்திய பட்டியலில் உள்ள இதுபோன்ற புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தினருக்குப் பயன்தரும் வகையில் இந்த ஆணையம் பரிந்துரைகள் அளிக்கவுள்ளது.

செலவினம்:

ஆணையத்தின் அலுவலக மற்றும் நிர்வாகம் தொடர்பான செலவுகள் தான் இதற்கு ஆகும். இவற்றை சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புத் துறை தொடர்ந்து வழங்கும்.

பயன்கள்:

எஸ்.இ.பி.சி.களின் மத்திய பட்டியலில் இடம் பெற்றிருந்தும், ஓ.பி.சி.களுக்கான இடஒதுக்கீட்டில் இப்போதைய திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணிகள், மத்திய அரசு கல்வி நிலைய மாணவர் சேர்க்கையில் பயன்களைப் பெறாதிருக்கும் சாதிகள், சமுதாயங்களைச் சேர்ந்த அனைவரும் இதனால் பயன் பெறுவார்கள்.

அமலாக்க அட்டவணை:

ஆணையத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான மற்றும் அதன் விசாரணை வரம்புகளை அதிகரிப்பதற்கான உத்தரவுகள், மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு, குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் உத்தரவின் மூலமாக அரசிதழில் அறிவிக்கை செய்யப்படும்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x