Published : 24 Jun 2020 01:21 PM
Last Updated : 24 Jun 2020 01:21 PM
கர்நாடக மருத்துவ உயர்க்கல்வித்துறை அமைச்சர் சுதாகர் ரெட்டியின் தந்தை, மனைவி, மகள் ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500ஐ கடந்துள்ள நிலையில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா பொறுப்பு அமைச்சரும், மருத்துவ உயர்க்கல்வித்துறை அமைச்சருமான சுதாகர் ரெட்டியின் குடும்பத்தினர் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சுதாகர் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால் மருத்துவமனைகளை அடிக்கடி பார்வையிடுகிறேன். சுகாதாரத்துறைஅதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திக்கிறேன். கடந்த மே மாதம் பத்திரிகையாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரோடு தொடர்பு இருந்ததால் என்னை நானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என் தந்தைக்கு சளி, இருமல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நான், என் மனைவி, 2 மகன்கள், மகள் ஆகியோர் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனை மேற்கொண்டோம்.
அதில் என் மனைவி, மகள் ஆகிய இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனக்கும், இரு மகன்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. என் குடும்பத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூவருக்கும் தொற்று எவ்வாறு பரவியது? அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? ஆகியவை குறித்து விசாரித்து வருகிறோம். அதே போல நானும் என் இரு மகன்களும் 14 நாட்களுக்கு வீட்டு தனிமையில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT