Published : 22 Jun 2020 03:49 PM
Last Updated : 22 Jun 2020 03:49 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு; குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் நோயாளிகளுக்கும், குணமடைந்தவர்களுக்கும் இடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கிறது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அதிக மக்கள் தொகை இருந்தும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என ஜூன் 21, 2020-ம் தேதி வெளியிடப்பட்ட உலக சுகாதார மையத்தின் 153வது நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30.04 ஆக உள்ளது. ஆனால், உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் சராசரியோ, இந்தியாவை விட 3 மடங்குக்கும் அதிகமாக 114.67 என்ற அளவில் உள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு அளவு ஒரு லட்சம் பேருக்கு 671.24 ஆக உள்ளது. ஜெர்மனி, ஸ்பெயின், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் முறையே 583.88, 526.22 மற்றும் 489.42 என்ற அளவில் உள்ளது.

கொவிட்-19 தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தில், மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து தரமான, ஆக்கப்பூர்வமான அணுகு முறையை முன்கூட்டியே பின்பற்றியது, இந்த எண்ணிக்கை குறைவுக்கு சாட்சியமாக உள்ளது.

இதுவரை, மொத்தம் 2,37,195 நோயாளிகள் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 9,444 கொவிட்-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் வீதம் 55.77 சதவீதமாக உள்ளது.

தற்போது, 1,74,387 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பிலும், சிகிச்சையிலும் உள்ளனர். குணமடைந்தவர்களுக்கும், கோவிட்-19 நோயாளிகளுக்கும் இடையேயான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதை கீழேயுள்ள வடைபடம் மூலம் பார்க்கலாம். இன்று குணமடைந்தவரகளின் எண்ணிக்கை, மருத்துவ மனையில் சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையை விட 62,808 கடந்தது.

கொவிட்-19 பரிசோதனைக் கட்டமைப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 723 ஆகவும், தனியார் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை 262 ஆகவும், ஆக மொத்த 985 ஆக அதிகரித்துள்ளன.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x