Last Updated : 22 Jun, 2020 11:49 AM

 

Published : 22 Jun 2020 11:49 AM
Last Updated : 22 Jun 2020 11:49 AM

பிரதமர் மோடி தனது வார்த்தைகளை அதன் விளைவுகளை மனதில் வைத்து  பயன்படுத்த வேண்டும்: லடாக் எல்லை பிரச்சினையில் மன்மோகன் சிங் கண்டனம்

பிரதமர் மோடி தனது வார்த்தைகளையும் அறிவிப்புகளையும் வெளியிடும் போதும் பயன்படுத்தும் போது அதன் விளைவுகளையும், தேசப்பாதுகாப்பு, எல்லைப்புற நலன் ஆகியவற்றை மனதில் வைத்து பேச வேண்டும். சீனா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் எல்லை கல்வான் பள்ளதாக்கில் இந்தியா, சீன படைகளுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக முதல்முறையாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாம் முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நம்முடைய அரசின் முடிவுகளும், செயல்களும் வருங்கால சந்ததியினர் நம்மை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதில் அதிகமான தாக்கத்தை கொண்டிருக்கிறது.

எங்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவருக்கு மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் இருக்கிறது. நம்முடைய ஜனநாயகத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு பொறுப்பு இருக்கிறது. ஆதலால், பிரதமர் மோடி தனது வார்த்தைகளையும் அறிவிப்புகளையும் வெளியிடும் போதும் பயன்படுத்தும் போது அதன் விளைவுகளையும், தேசப்பாதுகாப்பு, எல்லைப்புற நலன் ஆகியவற்றை மனதில் வைத்து பேச வேண்டும்.

கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் உள்ள இந்தியப் பகுதிகளை சீனா அப்பட்டமாக, சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுகிறது, 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து பாங்காங் சோ ஏரிப்பகுதியில் பலமுறை சீனா அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தலுக்கு நாம் பணிந்துவிட முடியாது, நம்முடைய எல்லைப்புற இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது.

சீனா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்ளும் வார்த்தையைப் பயன்படுத்த பிரதமர் மோடி அனுமதிக்க முடியாது. இந்த பிரச்சினை மேலும் வளராமல் இருக்க அரசின் அனைத்துப்பகுதிகளும் ஒன்றாக இணைந்து இதைக் கையாள வேண்டும்

நாம் ஒருதேசமாக அனைவரும் ஒன்று சேர வேண்டிய கட்டாய தருணத்தில் இருக்கிறோம், சீனாவின் அச்சறுத்தலுக்கு நாம் ஒன்று சேர்ந்து பதிலடி தர வேண்டும்.

ராஜதந்திரத்துக்கும், தீர்க்கமான தலைமைக்கும் தவறான தகவல் மாற்று இல்லை என்பதை நாங்கள் அ ரசுக்கு நினைவூட்டுகிறோம். பொய்யான அறிக்கைகள், வசதியான கூட்டாளிகள் மூலம் உண்மையை அடக்க முடியாது.

சீனாவின் தாக்குதலில் எல்லையைக் காக்கும் சண்டையில் தனது உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த கர்னல் பி சந்தோஷ் பாபு, மற்றும் வீரர்கள் உயிர் தியாகத்துக்கு நீதியை உறுதி செய்யவேண்டும் என பிரதமரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு குறைவாக ஏதேனும் செய்வது மக்களின் நம்பிக்கைக்கு வரலாற்று துரோகமாகும்

இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வரவேற்றுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டதத்ில் பிரதமர் மோடியின் பேசிய மேற்கோள்காட்டியுள்ள அந்த நாளேடு, “ தேசியவாதிகளுக்கும் மற்ற கடின நிலைப்பாட்டு வாதிகளுக்கும் கடினமான நிலைப்பாடு எடுத்து மோடி பேசியுள்ளார், ஆனால் சீனாவுடன் மேலும் மோதல் வைத்துக் கொள்ள முடியாது என்பதை மோடி புரிந்து வைத்துள்ளார், அதனால்தான் பதற்றங்களைத் தணிக்க அவர் முயற்சி செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x