Published : 22 Jun 2020 11:11 AM
Last Updated : 22 Jun 2020 11:11 AM

கரோனா வைரஸ் அப்டேட்ஸ்: கோவாவில் முதல் மரணம்- டெல்லி சிறையில் ஒருவர் பலி

கோவாவில் கரோனா வைரசுக்கு முதல் நபர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு கோவாவைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி கரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இதனையடுத்து சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து போனார். இது கோவாவில் முதல் கரோனா மரணமாகும்.

இவர் மோர்லெம் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்தக் கிராமம் ஏற்கெனவே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டதே.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 282-ஐ எட்டியுள்ளது. ஒரே நாளில் 14,821 தொற்றுக்கள் புதிதாக ஏற்பட்டுள்ளன.

உலகச் சுகாதார அமைப்பு நேற்று ஒரே நாளில் 1,83,000-த்துக்கும் அதிகமான கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் 15,400க்கும் அதிகமாக இந்தியாவில் என்றும் உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தொற்றுப்பரவலும் அதிகமாகியுள்ளது, கரோனாவுக்கான பரிசோதனைகளும் அதிகரித்துள்ளதால் எண்ணிக்கையில் உயர்வு தோன்றுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி சிறையில் முதல் பலி:

தலைநகர் டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் 62 வயது கைதி கரோனாவுக்கு பலியானதாகத் தெரிய வந்துள்ளது. இவர் ஜூன் 15ம் தேதி உறக்கத்திலேயே மரணமடைந்துள்ளார். பிறகு பரிசோதனையில்தான் 20ம் தேதி இவர் கரோனாவுக்குப் பலியானது தெரியவந்தது.

டென்னிஸ் வீரர் டிமிட்ரோவுக்கு கரோனா:

பல்கேரிய டென்னிஸ் வீரரும் உலகத் தரவரிசை 19ம் நிலையில் உள்ளவருமான கிரிகர் டிமிட்ரோவுக்குக் கரோனா பாசிட்டிவ். தான் வீடு திரும்பி விட்டதாகவும் தற்போது கரோனாவிலிருந்து சிகிச்சை மூலம் மீண்டு வருவதாகவும் ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

தாராவியில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைவு:

கடந்த ஏப்ரல் 1,2020-ல் உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் முதல் கரோனா கேஸ் பதிவானது. அதன் பிறகு பரவியது ஆனால் மகாராஷ்ட்ரா அரசு, பிரிஹன்மும்பை மாநகராட்சி கோவிட்-19 பரவலை 3 மாதங்களில் வெகுவாகக் குறைத்துள்ளது.

தொடக்கத்தில் 491 கரோனா கேஸ்களாக இருந்தது 12% விகிதத்தில் அதிகம் பரவியதுடன் 18 நாட்களில் இரட்டிப்பானது. ஆனால் தற்போது இப்பகுதியில் வெகுவாகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் வீட்டுத் தனிமை மீறல்கள்:

பெங்களூருவில் வீட்டுத் தனிமையில் இருக்கும் நோயாளிகள் கட்டுப்பாடில்லாமல் அலைவதால் அங்கு கரோனா தொற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் விதிமுறைகளை மீறுவதாக சுமார் 59,000 புகார்கள் எழுந்துள்ளன. இதில் 15,157 பேருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புகார் வந்தவுடன் அவர்கள் அரசு தனிமை முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பலர் மீது வழக்கும் தொடரப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x