Published : 21 Jun 2020 05:42 PM
Last Updated : 21 Jun 2020 05:42 PM
கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிராகக் களத்தில் பணியாற்றிவரும் 22 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீடு திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் காப்பீடு திட்டம் மார்ச் மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதிவரை மட்டும் செல்லுபடியாகும் வகையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து வருவதால், மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, செப்டம்பர் மாதம் வரை காப்பீடு திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாாரமன் ரூ.1.70 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவிக்கும்போது இந்தக் காப்பீடு திட்டத்தை அறிவித்தார். மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் நியூ இந்தியா அஸுரன்ஸ் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் நேரடியாகக் களத்தில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர் கரோனா நோயாளிகளைக் கையாள்கின்றனர். அப்போது அவர்களும்கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பைச் சந்தித்தால் அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க இந்தக் காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தத் திட்டம் மார்ச் மாதம் முதல் ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். இத்திட்டத்துக்கான நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்திலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு இந்தியாவில் அதிகரித்து வருவதையடுத்து இந்தத் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் சில பிரிவு ஊழியர்கள், மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்கள்.
மேலும், வார்டு பாய், செவிலியர்கள், ஆஷா நலப்பணியாளர்கள், பாராமெடிக்கல் பிரிவு பணியாளர்கள், தொழில்நுட்பப் பிரிவினர், பிற மருத்துவப் பணியாளர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT