Last Updated : 21 Jun, 2020 02:23 PM

 

Published : 21 Jun 2020 02:23 PM
Last Updated : 21 Jun 2020 02:23 PM

''சரண்டர் மோடி''- சீன ராணுவ மோதல் விவகாரத்தில் ராகுல் காந்தி மீண்டும் விமர்சனம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த விவகாரத்தில் தொடர்ந்து மத்திய அரசைச் சாடி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சரண்டர் மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்துவரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்றும், சீனா திட்டமிட்டு இந்திய ராணுவ வீரர்களைக் கொலை செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தி நேற்று பதிவிட்ட ட்விட்டர் கருத்தில், “பிரதமர் இந்தியப் பகுதியை சீன ஆவேசத்துக்கு ஒப்படைத்துவிட்டார். அந்த நிலப்பகுதி சீனாவுடையது என்றால் 1. ஏன் நம் வீரர்கள் கொல்லப்பட வேண்டும்? 2. எங்கு அவர்கள் கொல்லப்பட்டார்கள்?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்

இந்நிலையில் இன்று ஜப்பான் டைம்ஸ் எனும் நாளேட்டில் வெளிவந்துள்ள கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். அந்தக் கட்டுரையில் இந்தியாவின் அமைதியை விரும்பும் கொள்கை, சீனாவின் ஆவேசமான போக்கைத் தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. 2-வது முறையாக சீனா இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது இந்தியா தனது கொள்கையை மாற்றுமா” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி அதில், “பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி” எனச் சாடியுள்ளார்.

இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூடிய பிரதமர் மோடி, “ இந்தியாவின் எந்தப் பகுதியையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை” எனத் தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x