

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் அருகிலுள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதவுரியா பேசியதாவது:
மிகவும் சவாலான சூழ்நிலையில் உள்ள மகத்தான நடவடிக்கைகள் எந்த நிலையிலும் நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்கான நமது தீர்மானத்தை நிரூபித்துள்ளன. எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் துணிச்சலை வெளிப்படுத்தி வீர மரணமடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று உறுதியளிக்கிறேன்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு நமது பகுதியில் ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் நிலவரம், குறுகிய காலத்தில் நாம் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்கான, ஒரு படிப்பினையாகும். இப்போது குறுகிய காலத்திலும் தயாராகும் உக்திகளை நாம் கற்றுக்கொண்டுவிட்டோம். ராணுவ அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சில ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. ஆனால் அதைத் தொடர்ந்து சீன ராணுவத்தினர் செய்ததை ஏற்கவே முடியாது. இருந்தபோதும் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.