Published : 20 Jun 2020 10:00 PM
Last Updated : 20 Jun 2020 10:00 PM

சீன எல்லையில் வீரர்கள் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி வேண்டும்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

சீன எல்லையில் பணியாற்றும் நமது வீரர்கள் ஆயுதங்களை கையில் வைத்திருப்பதுடன், அதனை பயன்படுத்தவும் மத்திய அரசு அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.

இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த திங்கள்கிழமை மாலைசீன ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறும் போது, இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின. சீனாவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறுகையில் ‘‘சீன எல்லையில் பணியாற்றும் நமது வீரர்கள் ஆயுதங்களை கையில் வைத்திருப்பதுடன், அதனை பயன்படுத்தவும் மத்திய அரசு அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு நமது கொள்கை முடிவுகள் மாற வேண்டும். ஆயுதம் இல்லாமல் சென்று வீரர்கள் எல்லையில் உயிர் தியாகம் செய்வதை ஏற்க முடியாது.’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x