Published : 20 Jun 2020 12:51 PM
Last Updated : 20 Jun 2020 12:51 PM

ஆறு மாதக் குழந்தைக்குக் கிடைத்த தெய்வத்தாய்: கரோனாவுக்கு நடுவே ஒரு கருணை உள்ளம்

பெற்றோர் கரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், அவர்களது ஆறு மாதக் குழந்தையைத் தனது பராமரிப்பில் கவனித்துக்கொள்ளும் பெண்ணின் தன்னலமற்ற சேவை அனைவரின் மனதையும் நெகிழச் செய்திருக்கிறது.

ஹரியாணாவில் செவிலியர்களாகப் பணியாற்றிவரும் கேரளத் தம்பதியர், சில நாட்களுக்கு முன்னர் தங்கள் ஆறு மாத ஆண் குழந்தையான மல்லுவுடன் டெல்லியிலிருந்து விமானம் மூலம் தங்கள் சொந்த ஊரான கொச்சிக்கு வந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. எனினும், குழந்தைக்குத் தொற்று ஏற்படவில்லை.

எர்ணாகுளத்தில் தம்பதியர் தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், குழந்தையின் நிலை கேள்விக்குறியானது. கலமசேரி மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையைப் பராமரிக்க யாரும் இல்லை. அவர்களது உறவினர்களும் உடனே வந்துசேர வாய்ப்பு இல்லாத சூழல் இருந்தது. இதுகுறித்துச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை செய்து வருபவரும், பேரிடர் நிவாரண அமைப்பின் உறுப்பினருமாகிய முனைவர் மேரி அனிதா அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொள்ள முன்வந்தார். இவரது சேவை மனப்பான்மையைக் கருத்தில் கொண்டு இவரது கணவரும் குழந்தைகளும் இதற்குச் சம்மதித்தனர். தன் குடும்பத்திற்குச் சில நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்துவிட்டு, குழந்தையைப் பராமரிக்க மருத்துவமனைக்கு வந்துவிட்டார் மேரி அனிதா.

கரோனா தொற்று பரவிய ஆரம்பக் காலத்தில் இருந்தே எளிய மக்களுக்கும், சாலையோரவாசிகளுக்கும் தன் வீட்டில் இருந்தே உணவு தயாரித்து இலவசமாக விநியோகித்து வந்தவர் இவர். உளவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர், கரோனா களத்தில் தனித்து இருக்கும் குழந்தைக்கு தெய்வத்தாயாகி இருக்கிறார்.

இதையடுத்து மேரி அனிதாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x