Last Updated : 19 Jun, 2020 04:49 PM

 

Published : 19 Jun 2020 04:49 PM
Last Updated : 19 Jun 2020 04:49 PM

நாடு முழுவதும் 14 வயது வரையிலான குழுந்தைகளுக்கு ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டம், கல்விமுறை தேவை: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

கோப்புப்படம்

புதுடெல்லி

நாடு முழுவதும் 6 வயது முதல் 14 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் ஒரே சீரான கல்விமுறையும், பொதுப்பாடத்திட்டமும், பாடங்களையும் உருவாக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ கல்விமுறையை இணைத்து நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஒரே நாடு ஒரே கல்வி முறையை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா சார்பில் அவரின் வழக்கறிஞர் அஸ்வானி குமார் துபே தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

''மத்திய அரசிலும், ஒவ்வொரு மாநில அரசுகளிலும் ஒவ்வொரு வகையான பாடப்பிரிவுகளும், கல்வி முறையும் இருந்து வருகிறது. இதனால் குழந்தைகள் தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 21ஏ-ல் வழங்கப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி முறையை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.

இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி வழங்க வேண்டுமானால் அதற்கு நாடு முழுவதும் ஒரே சீரான கல்வி முறையைக் கொண்டுவராமல் சாத்தியமாகாது. இதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையான நடவடிக்கைகளை எடுத்து சீரான கல்வி முறையை, பொதுப்பாடங்களை, பாடப்பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும்.

போதுமான அளவு சமூக பொருளாதார சமத்துவத்தையும், நீதியையும் அடைவதற்கு, மேலாண்மை நிர்வாகத்தின் இயங்கும் பள்ளிகளாக இருந்தாலும் சரி, அல்லது உள்ளாட்சி, மாநில அரசு, மத்திய சார்பில் இயங்கும் பள்ளியாக இருந்தாலும், அனைத்து ஆரம்பக்கல்வி பாடசாலைகளிலும் பாடப்பிரிவுகளும், பாடத்திட்டங்களும் ஒரே சீராக இருப்பது அவசியம்.

ஒவ்வொரு மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழிக்கு ஏற்ப குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கும் மொழி வேறுபட்டதாக இருக்காலம். ஆனால், பாடப்பிரிவுகளும், பாடத்திட்டங்களும் 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு ஒரே மாதிரியாகவே இருத்தல் அவசியம்.

ஜிஎஸ்டி கவுன்சில் இருப்பதைப் போன்று, தேசிய கல்விக் கவுன்சில் அல்லது தேசிய கல்வி ஆணையம் ஒன்றை உருவாக்க நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் ஒவ்வொரு கல்வி வாரியமும் ஒவ்வொரு வகையான பாடப்பிரிவுகளையும், பாடத்திட்டங்களையும் வைத்துள்ளன. சிபிஎஸ்இ அடிப்படையில் நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற கல்வி முறை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை கல்வியில் வழங்க இயலாது.

6 வயது முதல் 14 வயதுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு நிலையான புத்தகத்தை உருவாக்கி, அதில் அடிப்படை உரிமைகள், கடமைகள், வழிகாட்டும் கொள்கைகள், தேசத்தின் இலக்குகள், அரசியலமைபபுச் சட்டத்தின் முகவுரை ஆகியவை இடம்பெறுமாறு அறிமுகப்படுத்த உத்தரவிட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகள் அடிப்படையிலான புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், இலவசம் மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் படித்த குழந்தைகளை, சிபிஎஸ்இ பள்ளிகளிலும், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்ளோடு ஒப்பிடுகையில் அவர்கள் போதுமான அளவு திறன்மிக்கவர்களாக இல்லை.

ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ கல்வி முறையை இணைத்து நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஒரே நாடு ஒரே கல்வி முறையை உருவாக்க உத்தரவிட வேண்டும்.

மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள், சிபிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி மாணவர்களோடு ஒப்பிடுகையில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இந்த ஏற்றத்தாழ்வைக் கூட முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆர்வலர்களுக்காக ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வை மத்திய அரசால் கொண்டுவர முடியுமா?

நாடு முழுவதும் தற்போதுள்ள நிலையில் பொதுவான பாடப்பிரிவுகள், பாடத்திட்டங்கள் கொண்ட மதிப்பு அடிப்படையிலான கல்வி முறை 6 வயது முதல் 14 வயதுடைய குழந்தைகளுக்கு அவசியம்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x