Published : 19 Jun 2020 02:07 PM
Last Updated : 19 Jun 2020 02:07 PM
சீனாவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 20 அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி மாலை ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக, திமுக உட்பட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவில் நடந்த விவகாரம் தொடர்பாகவும், இந்தியா தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT