Last Updated : 18 Jun, 2020 02:36 PM

 

Published : 18 Jun 2020 02:36 PM
Last Updated : 18 Jun 2020 02:36 PM

தேரோட்டம் நடந்தால் எங்களை ஜெகந்நாதர் மன்னிக்கமாட்டார்: ஒடிசா பூரி ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை

கோப்புப்படம் -ஏஎன்ஐ

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை இந்த ஆண்டு நடக்க நாங்கள் அனுமதித்தால் எங்களை ஜெகந்நாதர் மன்னிக்கமாட்டார். ஆதலால், இந்த ஆண்டு ரத யாத்திரை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக இன்று அறிவித்தது.

ஒடிசா மாநிலத்தின், கடற்கரை நகரான பூரியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயில் புகழ்பெற்றது. இங்கு மூலவர்களாக பாலபத்ரா, அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள்.

அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது.

இந்த ரத யாத்திரைக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மரத்தால் தேர் செய்யப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் அந்தத் தேர் கலைக்கப்படும். இந்த மூன்று தேர்களுக்கு தாலத்வாஜா, தேபேத்லன், நந்திகோஷா என்று பெயரிடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு தேரும் ஏற்குறைய 14 அடி நீளம் வரை இருக்கும். தேர் தெருக்களில் நகர்ந்து வரும்போது, மக்கள் மேள தாளங்களை இசைத்தும், இசைக்கருவிகளை மீட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். 10 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கிலான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து திரும்புவார்கள்.

இந்தப் புகழ்பெற்ற தேரோட்டத் திருவிழா வரும் 23-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவந்தன.

ஆனால் ஒடிசாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான ஒடிசா விகாஸ் பரிசத் எனும் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தது. அதில், “கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் 23-ம் தேதி பூரி நகரில் ஜெகந்நாதர் தேரோட்டம் நடந்தால் கரோனா பாதிப்பு இன்னும் தீவிரமாகும். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் அந்தத் தேரோட்டத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் பக்தர்கள் பங்கேற்றால் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும்.

10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள். இது கரோனா வைரஸ் பாதிப்பை வரவேற்பது போன்றதாகும். ஜூன் 30-ம் தேதி வரை எந்தத் திருவிழாவும் நடத்தக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்ட நிலையிலும் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆதலால், திருவிழாவை ஒத்திவைக்க வேண்டும்” எனக் கோரியிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் தினீஷ் மகேஸ்வரி, ஏஎஸ் போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகல் ரோஹத்கி ஆஜரானார்.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிடுகையில், “மாநில அரசு வரும் 30-ம் தேதி வரை எந்தத் திருவிழாவும் நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ள நிலையில் இந்தத் திருவிழாவும், தேரோட்டமும் நடக்க உள்ளது. இது மாநில அரசின் உத்தரவை மீறிய செயலாகும். கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தேரோட்டத்தை அனுமதித்தால் மக்களின் கரோனாவில் பாதிக்கப்படுவது மேலும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பிறப்பித்த உத்தரவில், “இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும்போது மக்களின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் உண்மையில் மிகவும் தீவிரமானது. திருவிழாவுக்கு அனுமதித்து 10 ஆயிரம் பேர் கூடினால் கூட விபரீதமாகிவிடும்.

கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு இந்த ஆண்டு நாங்கள் தேரோட்டத்தை நடக்க அனுமதித்தால் பூரி ஜெகந்நாதர் எங்களை மன்னிக்கமாட்டார். ஆதலால், இந்த ஆண்டு பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை நடத்தத் தடை விதிக்கிறோம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் எந்த விதமான யாத்திரையும், திருவிழாவும் நடக்க ஒடிசா மாநில அரசும் அனுமதிக்கக் கூடாது” என உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x