

இந்திய மக்கள் சீன உணவுப்பெருட்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இந்திய ஓட்டல்களில் சீன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதத் தொடக்கத்தில் நடை பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும், அங்கிருந்து இந்திய ராணுவப் படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் இந்திய – சீன எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது.
இதனிடையே, இரு தரப்பைச் சேர்ந்த ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கிக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த திங்கள்கிழமை மாலைசீன ராணுவப் படைகள் அங்கிருந்து வெளியேறும் போது, இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின.
சீனாவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இதுகுறித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:
இந்திய எல்லைப்பகுதியை ஆக்கிரமிப்பதை சீனா ஒரு நடவடிக்கையாகவே தொடர்ந்து செய்து வருகிறது. இதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்திய மக்கள் சீன உணவுப்பெருட்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இந்திய ஓட்டல்களில் சீன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.