

நாட்டின் பகுதியைக் காக்க உயர்ந்தபட்ச உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்க்ளுக்காக நாடு எப்போதும் கடன்பட்டிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய தீரம் தாய்நாட்டின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று அமித் ஷா மேலும் தெரிவித்தார்.
கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட சண்டையில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் எய்தினர். இதனையடுத்து தொடர் ட்வீட்களில் அமித் ஷா, தைரியமான வீரர்களை இழக்கும் வலியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாதது என்று வேதனை தெரிவித்தார்.
“இந்தியா எப்போதும் அவர்களது உயர்ந்த உயிர்த்தியாகத்துக்கு கடன் பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாடும் மோடி அரசும் இந்தத் துயரம் தோய்ந்த தருணத்தில் அவர்களது குடும்பத்துடன் இணைந்து நிற்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
இந்தியா தன் பிராந்தியத்தைக் காப்பாற்றுவதற்கான அர்ப்பணிப்பு உணர்வை அவர்களது தைரியம் பிரதிபலிக்கிறது. இந்திய ராணுவத்துக்கு அத்தகைய தைரிய நாயகர்களை அளித்த குடும்பத்தினருக்கு தலைவணங்குகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியும் ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது, இந்தியா அமைதியை விரும்புகிறது ஆனால் தொடர்ந்து தூண்டினால் தக்கப் பதிலடி கொடுக்கவும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை ஏன் நிலைமை இந்த உச்சக்கட்ட வன்முறைக்குப் போனது என்பது பற்றி அரசு ஏன் விளக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.