Last Updated : 17 Jun, 2020 01:49 PM

 

Published : 17 Jun 2020 01:49 PM
Last Updated : 17 Jun 2020 01:49 PM

எல்லையில் இந்திய ராணுவத்துடன் மோதல்: சீனா தரப்பில் ராணுவ உயர் அதிகாரி உள்பட 35 வீரர்கள் உயிரிழப்பு: அமெரிக்க உளவுத்துறை தகவல்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் சீன ராணுவம் தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சேக், தவுலத் பெக் ஓல்டி ஆகிய எல்லைப் பகுதிகளில் கடந்த 5 வாரங்களாக இந்திய- சீன ராணுவத்தினரிடையே மோதல் நீடித்து வந்தது.

இரு தரப்பிலும் படைகளைக் குவித்து வந்தனர். இந்த மோதலைத் தீர்க்க இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சுவார்த்தை நடந்தாலும் பதற்றம் தணிந்ததே தவிர பிரச்சினை தீரவில்லை. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் மூலமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இரு நாட்டுப் படைகளும் அங்கிருந்து திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 வீரர்கள் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சீன ராணுவம் தரப்பில் உயிரிழப்பும், காயமடைந்தும் இருக்கிறார்கள் என்று தெரிவித்தாலும் இதுவரை அந்நாட்டு ராணுவம் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால், சீனா தரப்பில் குறிப்பிடத்தகுந்த அளவு ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள், காயமடைந்துள்ளனர் என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

45 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா-சீனா ராணுவ மோதலில் முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் இரு நாட்டு எல்லைகளிலும் பெரும்பதற்றம் நீடித்து வருகிறது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரவு பிரதமர் மோடியைச் சந்தித்து எல்லையில் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ ஜெனரல் எம்எம் நரவானே ஆகியோருடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தலைமை அதிகாரி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள் ஆகியோருடன் கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் சூழல் குறித்துக் கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தார்.

சீன ராணுவம் தரப்பில் உயிரிழந்த வீரர்கள் குறித்து எந்தவிதமான தகவலும் இதுவரை இல்லை. ஆனால், நேற்று கிழக்கு லடாக் பகுதியில் ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ்கள் வந்து சென்றதையும் இந்திய ராணுவத்தினர் உறுதி செய்தனர்.

இந்த சூழலில் அமெரிக்க உளவுத்துறை இன்று வெளியிட்டதகவலில், “கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட கடுமையான மோதலில் சீன ராணுவத்தின் கமாண்டிங் அதிகாரி உள்பட 35 பேர் உயிரிழந்திருக்கக்கூடும். இதில் பாதிப்பும் சேர்த்துதான் கணக்கிடுகிறோம். கல்வான் ஆற்றுப்பகுதி வரை ஆம்புலன்ஸ்கள் வந்து உடல்களை எடுத்துச் சென்றுள்ளன. ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகள் நடந்துள்ளன'' எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x