Published : 16 Jun 2020 09:30 PM
Last Updated : 16 Jun 2020 09:30 PM

விதிமுறைகளை பின்பற்றினால் கரோனா பாதிப்பில் இருந்து விரைவாக மீளமுடியும்: பிரதமர் மோடி

நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதோடு, விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால், கரோனா வைரலசால் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்படும் என்பது, நாம் அறிந்து கொண்ட பாடம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

முதற்கட்ட ஊரடங்கிற்குப் பிந்தைய நிலைமை மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் குறித்து, பிரதமர் நரேந்திரமோடி, இன்று காணொலிக்காட்சி வாயிலாக மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்தும் 6-வது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பு மார்ச்20, ஏப்ரல் 2, ஏப்ரல் 11, ஏப்ரல்27 மற்றும் மே-11 ஆகிய நாட்களில் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கரோனா பெருந்தொற்றை ஒழிக்க உரிய நேரத்தில் தக்க முடிவுகளை மேற்கொண்டதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பரவுவது வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார். கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்போமானால், கூட்டாட்சித் தத்துவத்தை உலகிற்கு நாம் எடுத்துக்காட்டியிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்க முயற்சித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். தற்போது அனைத்து வகையான போக்குவரத்தும் தொடங்கியுள்ள நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர், தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர், இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், உலகின் பிறநாடுகளைப் போன்று உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நிலையை கரோனா வைரஸ் ஏற்படுத்தவில்லை.

இந்தியர்கள் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகளை உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்கள் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை தற்போது 50சதவீதத்தைத் தாண்டி விட்டதாகவும் கூறினார். மேலும், கரோனாவால் குறைந்த அளவிலான உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில் ஒன்றாகத்தான் இந்தியா உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதோடு, விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றினால், கரோனா வைரலசால் மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பு ஏற்படும் என்பது, நாம் அறிந்து கொண்ட பாடம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

முகக்கவசங்கள் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். ‘இரண்டு கஜ தூரம்’ இடைவெளி என்ற மந்திரத்தைப் பின்பற்றுவதோடு, சோப் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கைகளை, அடிக்கடி கழுவ வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இந்தக் கட்டுப்பாடுகளில் எவ்விதக் குறைபாடு

ஏற்பட்டாலும், அது, கரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x