Published : 16 Jun 2020 08:52 PM
Last Updated : 16 Jun 2020 08:52 PM

லடாக் எல்லையில் மோதல்- பலி; சீன வீரர்களின் செயல்பாடே காரணம்: இந்தியா குற்றச்சாட்டு

பிரதிநிித்துவப் படம்

புதுடெல்லி

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு சீன வீரர்கள் தற்போது உள்ள கட்டுப்பாட்டு சூழல் நிலையை மாற்றும் நோக்கத்துடன் நடந்து கொண்டதே காரணம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 2,500க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குடில் அமைத்துத் தங்கினர். போர்ப்பயிற்சியிலும் ஈடுபடுவதும், பதுங்குக் குழிகள் அமைப்பதிலும் இருந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இருதரப்புப் பிரச்சினையைத் தீர்க்க ராணுவக் கமாண்டர்கள் மட்டத்தில் இரு தரப்பு ராணுவத்தினரும் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ராணுவ மேஜர் அளவிலான பேச்சுவார்த்தை 3 முறை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து இந்திய -சீன வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கால்வான் பள்ளாத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாடுகளும் ராணுவத்தைத் திரும்பப் பெற முடிவு செய்து அதற்கான பணியில் இருந்தனர்.

அப்போது இந்திய வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பிலும் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கிறது.

இந்திய ராணுவத்தினர் எல்லை மீறி வந்து சீன ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால்தான் தாக்கினோம் என்று சீனா குற்றச்சாட்டியது. இந்தநிலையில் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்கு சீன வீரர்கள் தற்போது உள்ள கட்டுப்பாட்டு சூழல் நிலையை மாற்றும் நோக்கத்துடன் நடந்து கொண்டதே காரணம் இந்த மோதலால் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

சீன ராணுவ உயரதிகாரிகள் உரிய எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருந்தால் இதுபோன்ற மோதலை தவிர்த்து இருக்க முடியும். எனினும் இந்த பிரச்சினையில் அமைதியை நிலைநாட்டவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவுமே இந்திய தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x