Last Updated : 16 Jun, 2020 05:14 PM

 

Published : 16 Jun 2020 05:14 PM
Last Updated : 16 Jun 2020 05:14 PM

இந்திய வீரர்கள் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது; என்ன நடந்தது என்பதை விளக்குங்கள்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அரசு விளக்க வேண்டும என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 2,500க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் குடில் அமைத்துத் தங்கினர். போர்ப்பயிற்சியிலும் ஈடுபடுவதும், பதுங்குக் குழிகள் அமைப்பதிலும் இருந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவமும் படைகளைக் குவித்தது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இருதரப்புப் பிரச்சினையைத் தீர்க்க ராணுவக் கமாண்டர்கள் மட்டத்தில் இரு தரப்பு ராணுவத்தினரும் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ராணுவ மேஜர் அளவிலான பேச்சுவார்த்தை 3 முறை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து இந்திய -சீன வெளியுறவு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் கால்வான் பள்ளாத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாடுகளும் ராணுவத்தைத் திரும்பப் பெற முடிவு செய்து அதற்கான பணியில் இருந்தனர்.

அப்போது இந்திய வீரர்களுக்கும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பிலும் 5 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவித்தாலும் அது உறுதி செய்யப்படவில்லை.

இந்திய ராணுவத்தினர் எல்லை மீறி வந்து சீன ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதால்தான் தாக்கினோம் என்று சீனா குற்றச்சாட்டு வைக்கிறது.

இச்சம்பவத்தால் லடாக் பகுதியில் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ மேஜர் அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி பிபின் ராவத், முப்படைத் தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஆனந்த் சர்மா கூறுகையில், “சீன எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டறிந்தேன்.

இந்த நேரத்தில் மத்திய அரசு தேசத்துக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளையும் அழைத்து உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது. தேசத்துக்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயம் தேசத்தின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசிடம் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பேச்சுவார்த்தை ஆகியவற்றுக்கு மாறாக சீனா நடந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சீன ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. நம்பும் வகையில் இ்லலை. ஏற்கவும் முடியவில்லை. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதி செய்வாரா” எனக் கேட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x