Published : 16 Jun 2020 04:32 PM
Last Updated : 16 Jun 2020 04:32 PM

கரோனா பரவல்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முதல்கட்ட ஆலோசனை

புதுடெல்லி

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த இருவாரங்களாக தீவிரமாக அதிகரித்துவரும் சூழலில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று நடைபெற்று வரும் முதல்கட்ட ஆலோசனையில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கொண்டுவரப்பட்ட லாக்டவுனை ஒவ்வொரு முறை நீட்டிக்கப்படுவதற்கு முன் இதேபோன்று பிரதமர் மோடி , மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி கருத்துக்களைக் கேட்டறிந்தார். அதன்பின்புதான் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது

ஆனால், இப்போது மாறுபட்ட சூழல் நிலவுகிறது. லாக்டவுனை தளர்த்துவதற்கான முதலாவது கட்டத்தில் நாடு இருந்து வருகிறது. இந்த சூழலில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த இரு வாரங்களாக நாடுமுழுவதும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து எப்போதும் இல்லாத வகையில் நாள்தோறும் பாதிக்கப்படும் அளவு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது, ஒட்டுமொத்த உயிரிழப்பும் 10 ஆயிரத்தை எட்ட உள்ளது. இந்த நேரத்தில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிப்பது முக்கியத்துவம் பெறுகிறது

ஆலோசனைக் கூட்டத்தில் வடகிழக்கு மாநில முதல்வர்கள், பஞ்சாப், அசாம், கேரள உள்ளிட்ட கரோனா பரவல் குறைவாகவுள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர்களிடம் லாக்டவுனை நீக்கும் முதலாவது கட்டத்தில் இருப்பதால், பொருளாதாரத்தை வேகப்படுத்துவது குறித்தும் மாநில அரசுகள் கரோனா பரிசோதனைகளின் அளவுகளை அதிகரிப்பதன் தேவை குறித்தும் பிரதமர் மோடி விவாதித்து வருவதாக தெரிகிறது. இந்த மாநிலங்களில் கரோனா தடுப்பு பணிகள் ஒரளவு வெற்றிகரமாக நடைபெற்று வருவதால் அடுத்தகட்டமாக பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

நாளை நடக்கும் கூட்டத்தில் கரோனா தாக்கம் அதிகமுள்ள தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x