Published : 22 May 2014 11:00 AM
Last Updated : 22 May 2014 11:00 AM
தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் 200-வது பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உலகத் தமிழர் பேரமைப்பின் கர்நாடக கிளை சார்பாக பெங்களூரில் உள்ள பென்சன் டவுனில் இயங்கி வரும் இந்திய சமூக மைய (ஐஎஸ்ஐ) வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பழ.நெடுமாறன் கலந்து கொள்கிறார்.
''திராவிட மொழிகள் ஒப்பிலக் கண நூல்'' எனும் ஒப்பற்ற நூலை தமிழுக்கு தந்த ராபர்ட் கால்டுவெல்லின் பிறந்த நாள் வெகு சிறப்பாக விழா எடுத்து கொண்டாடப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தமிழறிஞர் கால்டுவெல்லின் பிறந்தநாள் விழாவை கர்நாடகத்தி லும் கொண்டாட அங்குள்ள தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் உலகத் தமிழ் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து பெங்களூர் தமிழ் இலக்கியவாதிகளை ஒருங்கிணைக்கும் வகையில், ‘சிறகுகள் இலக்கிய வட்டம்' தொடங்கப்பட இருக்கிறது. இதனிடையே 2013-ம் ஆண்டிற்கான சிறந்த மொழிப் பெயர்ப்பிற்காக ‘சாகித்ய அகாதமி விருது' பெற்ற எழுத்தாளர் இறையடியானுக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் அருள் தந்தை ஜே.ஆரோக்கியநாதன், பெங்களூர் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், பேரா.சி.ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT