Published : 16 Jun 2020 06:48 AM
Last Updated : 16 Jun 2020 06:48 AM

இந்த நூற்றாண்டு இறுதியில் இந்தியாவின் வெப்ப நிலை 4.4 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், புணே நகரில் இந்திய வெப்ப மண்டல வானிலை அறிவியல் நிறுவனம் செயல்படுகிறது. இதன் ஒரு பிரிவான பருவநிலை மாறுபாடு ஆய்வு மையம் பருவநிலை மாறுபாட்டால் நாட்டில் ஏற்படும் விளைவுகள் தொடர்பான அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் சராசரி வெப்பநிலை 1901 முதல் 2018 வரை 0.7 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இதற்கு பெரும்பாலும் பசுமைக் குடில் வாயுக்கள் ஏற்படுத்திய விளைவே காரணம். 21-ம்நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 1986 முதல் 2015 வரையிலான 30 ஆண்டு காலத்தில் ஆண்டின் கடும் வெப்ப நாள் மற்றும் கடும் குளிர் இரவின் வெப்ப நிலை முறையே 0.63 டிகிரி மற்றும் 0.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்த நாட்களின் வெப்ப நிலை முறையே 4.7 டிகிரி மற்றும் 5.5 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப நாட்கள் மற்றும் வெப்ப இரவுகள் அடுத்தடுத்து நிகழும் நிலை 55 முதல் 70 சதவீதம் அதிகரிக்கலாம். மேலும் இந்தியாவில் ஏப்ரல் – ஜுன் வரையிலான கோடை காலத்தில் வெப்ப அலைகளின் தீவிரம் 3 முதல் 4 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x