Published : 15 Jun 2020 05:28 PM
Last Updated : 15 Jun 2020 05:28 PM

கரோனா சிகிச்சை; டெல்லி மருத்துவமனையில் அமித் ஷா நேரில் ஆய்வு 

புதுடெல்லி

டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கரோனா சிகிச்சை தொடர்பாக நடந்து வரும் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கடந்த 6 நாட்களில் மிகவும் தீவிரமடைந்துளளது. 6 நாட்களில் 10 ஆயிரம் பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வருவதற்கு 13 நாட்களும், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக வருவதற்கு 8 நாட்கள் எடுத்தநிலையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரத்தை 6 நாட்களில் எட்டியது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக கூட்டம் நேற்று நடந்தது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் சூழல் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் கேஜ்ரிவால், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மத்திய சுகாதாரத்துறை, டெல்லி மாநகர மேயர்கள், டெல்லியின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை தொடர்பாக ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். டெல்லியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக மருததுவமனைகள் மற்றும் படுக்கைகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x