Published : 15 Jun 2020 04:21 PM
Last Updated : 15 Jun 2020 04:21 PM

டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில் பெட்டிகள்; ஒப்படைக்க தொடங்கியது ரயில்வே

டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 900 படுக்கை வசதியுடன் கூடிய 50 ரயில் பெட்டிகள் முதல்கட்டமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே 3-வது அதிகமாக கரோனா நோயாளிகள் இருப்பது டெல்லியில் தான்.

கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார்எழுந்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எராளமான படுக்கைகள் காலியாக உள்ளபோதும், கரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாகவும் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெல்லியில் கரோனா பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரயில் பெட்டிகள் மருத்துவ மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து வடக்கு ரயில்வே தகவல் தொடர்பாளர் தீபக் குமார் கூறியதாவது:

‘‘கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரயில்கள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது 8 ஆயிரம் படுக்கைகள் ரயில்களில் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் டெல்லிக்கு 500 ரயில் பெட்டிகளை ஒப்படைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி ஷாகுர் பஸ்தி பகுதிக்கு 50 ரயில் பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் 900 படுக்கை வசதிகள் உள்ளன. இதுவரை 180 பெட்டிகளை ஆனந்த் விஹார் உள்ளிட்ட மற்ற ரயில் நிலையங்களில் நாளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x