Published : 15 Jun 2020 03:54 PM
Last Updated : 15 Jun 2020 03:54 PM
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் இயங்கி வரும் இந்தியத் தூதரகத்தில் பணிபுரியும் இரு ஊழியர்கள் திடீரென காணவில்லை. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இந்திய அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அலுவலக ரீதியாக இன்று காலை வெளியில் சென்ற தூதரகப் பணியாளர்கள் இருவர் அலுவலகம் வந்து சேரவில்லை. அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று சேரவில்லை. இந்த விஷயத்தை நாங்கள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம்.
இரு ஊழியர்களுமே இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வரும் சிஎஸ்ஐஎப் ஓட்டுநர்கள் ஆவர். இவர்கள் இருவரையும் பலமுறை தொடர்பு கொண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த இரு தூதரக அதிகாரிகள் அபித் ஹூசைன், முகமது தாஹரி் ஆகியோர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அவர்களை இந்திய அரசு வெளியேற்றியது.
இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்த வாரத்தில் இந்தியத் தூதரகத்தின் இரு ஊழியர்களைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியபின், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் தொந்தரவு அளித்து வந்தது. இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் இந்தியத் தூதரக ஊழியர்கள் காணாமல் போனது குறித்து இந்தியா சார்பில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் எடுத்துச் சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT