Published : 15 Jun 2020 02:07 PM
Last Updated : 15 Jun 2020 02:07 PM

கரோனா தடுப்பு நடவடிக்கை; டெல்லி அரசு நடத்தும் நாடகம்: காங்கிரஸ் கடும் தாக்கு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டெல்லி அரசு நாடகம் நடத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் கடந்த 6 நாட்களில் மிகவும் தீவிரமடைந்துளளது. 6 நாட்களில் 10 ஆயிரம் பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வருவதற்கு 13 நாட்களும், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக வருவதற்கு 8 நாட்கள் எடுத்தநிலையில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரத்தை 6 நாட்களில் எட்டியது. கடந்த 2-ம் தேதியிலிருந்து நாள்தோறும் ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி அரசு அமைத்திருந்த மருத்துவக் குழு அளித்த அறிக்கையில் ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் 5.50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக கூட்டம் நேற்று நடந்தது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் சூழல் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் கேஜ்ரிவால், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மத்திய சுகாதாரத்துறை, டெல்லி மாநகர மேயர்கள், டெல்லியின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு விதிக்கப்படும் கட்டணத்தை அரசு முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தின.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்திரி பின்னர் கூறியதாவது:

‘‘டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மக்களை திசை திருப்புகிறார். தனியார் மருத்துவனைகளை அரசு தன் பொறுப்பில் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். 2609 படுக்கைகளுடன் கூடிய 3 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இதுபற்றி டெல்லி முதல்வர் ஏதும் கூற மறுக்கிறார்.

கரோனா களத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக கேஜ்ரிவால் அறிவித்தார். இன்று வரை அந்த இழப்பீடு தொகை வழங்கவில்லை. உடனடியாக இதனை வழங்க வேண்டும். டெல்லி அரசு நாடகம் நடத்துவது ஏன்’’ எனக் கூறினாா்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x