Published : 14 Jun 2020 03:03 PM
Last Updated : 14 Jun 2020 03:03 PM

டெல்லியில் கரோனா மருத்துவமனையாக மாறும் சத் சங்க அமைப்பின் தியானக் கூடம்: 10 ஆயிரம் படுக்கை வசதி

புதுடெல்லி

டெல்லியில் உள்ள ராதாஸ்வாமி சத் சங்க அமைப்பின் தியானக் கூடத்தை 10 ஆயிரம் படுக்கைகளுடன் மருத்துவமனையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

பின்னர் ஜூன் மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே 3-வது அதிகமாக கரோனா நோயாளிகள் இருப்பது டெல்லியில் தான். கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார்எழுந்துள்ளது.

குறிப்பாக, டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எராளமான படுக்கைகள் காலியாக உள்ளபோதும், கரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாகவும் செய்தி வெளியானது.இதுதொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து கூடுதல் ஏற்பாடுகளை டெல்லி அரசு செய்து வருகிறது.

இந்தநிலையில் டெல்லியில் உள்ள ராதாஸ்வாமி சத் சங்க அமைப்பு தங்களது இடத்தை கரோனா மருத்துவமனையாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி சத்தர்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தியானம் செய்யும் கூடம் உள்ளது.

இதனை மருத்துவமனையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. சுமார் 10 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x