Published : 14 Jun 2020 02:11 PM
Last Updated : 14 Jun 2020 02:11 PM
டெல்லியில் கரோனாவுக்கு எதிராக மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு போராடும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
கரோனா பரவலை தடுக்க ஜூன் மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும் கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே 3-வது அதிகமாக கரோனா நோயாளிகள் இருப்பது டெல்லியில் தான்.
இதனால் டெல்லியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதனை மாநில அரசு திட்டமவட்டமாக மறுத்துள்ளது.
கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என புகார்எழுந்துள்ளது.
குறிப்பாக, டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எராளமான படுக்கைகள் காலியாக உள்ளபோதும், கரோனா நோயாளிகளை அலைக்கழிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும் டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் கரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடப்பதாகவும் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து டெல்லியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக இன்று கூட்டம் நடைபெற்றது. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு அடுத்த 6 நாட்களில் கரோனா பரிசோதனை 3 மடங்காக அதிகரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரயில்கள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தற்போது 8 ஆயிரம் படுக்கைகள் ரயில்களில் தயார் நிலையில் உள்ளன. கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் சோதனை கூடங்கள் மூலம் சோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில் ‘‘மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடந்த கூட்டம் பயனுள்ளதாக இருந்தது. டெல்லி அரசும், மத்திய அரசும் இணைந்து நடந்திய இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இரு அரசுகளும் இணைந்து கரோனாவுக்கு எதிராக போராடும்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT