Published : 14 Jun 2020 07:01 AM
Last Updated : 14 Jun 2020 07:01 AM
கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள்மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக வேட்பாளர்கள் இருவர் உட்பட நால்வரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்பிக்கள் 4 பேரின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாகும் 4 இடங்களுக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின்படி பாஜகவை சேர்ந்த இருவரும், காங்கிரஸ், மஜதவை சேர்ந்த தலா ஒருவரும் தேர்வு செய்யப்பட இருந்தனர்.
இதையடுத்து, மஜத சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதேபோல, பாஜக சார்பில் அசோக் கஸ்தி, ஈரண்ண கடதி ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். சங்கமேஸ் நரகுந்து என்பவரும் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 9-ம் தேதி வேட்பு மனுதாக்கல் முடிந்த நிலையில், மனுபரிசீலனையின்போது, சுயேச்சை வேட்பாளர் சங்கமேஸ் நரகுந்துவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட நால்வரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, தேர்தல் அதிகாரிவிசாலாட்சி, பாஜக வேட்பாளர்கள் அசோக் கஸ்தி, ஈரண்ண கடதி,காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே, மஜத வேட்பாளர் தேவகவுடா ஆகிய நால்வரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். இதன் மூலம் மூத்த அரசியல் தலைவர்களான தேவகவுடா இரண்டாவது முறையாகவும், மல்லிகார்ஜூன கார்கே முதல் முறையாகவும் மாநிலங்களவைக்கு செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT