Published : 14 Jun 2020 06:57 AM
Last Updated : 14 Jun 2020 06:57 AM

லடாக் - சீனா எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: ராணுவ தளபதி எம்.எம்.நராவனே தகவல்

லடாக் எல்லை நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லையில் படைகள் குவிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதமாக பதற்றம் நிலவியது. கடந்த6-ம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டன.

இதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். லடாக் மட்டுமின்றி சிக்கிம்,உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்எல்லை நிலவரம் எவ்வாறு உள்ளதுஎன்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நராவனே நேற்று கூறியதாவது: கிழக்கு லடாக்கின் சீன எல்லைப் பகுதி நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ராணுவ நிலையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருதரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

அண்டை நாடான நேபாளத்துடன் நல்லுறவு தொடர்கிறது. பூகோள, கலாச்சார, வரலாற்றுரீதியாக இரு நாடுகளின் மக்களிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த உறவு வருங்காலத்திலும் தொடரும்.

காஷ்மீரில் பணியாற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த யூனியன் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களில் 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தீவிரவாதிகளின் நடமாட்டம் தொடர்பாக உள்ளூர் மக்களே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதனால்அங்கு நிலைமை மேம்பட்டு வருகிறது. காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தை கைவிட்டு வருகின்றனர். இது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவும் இந்த தருணத்தில் ராணுவ வீரர்கள், மக்களின்எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x