

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மும்பை, டெல்லி, சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் ஒரு லட்சத்தை கடந்துள்ளது. நாடுமுழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.
இதனால் டெல்லியில் ஊரடங்கு தளர்வை குறைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஏற்கெனவே மாநில முதல்வர்களுடன் லாக்டவுன் தொடர்பாக 5 கட்டங்களாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையில் லாக்டவுன் நிலவரம், பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குதல், விதிகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், மத்திய அமைச்சர்கள் சிலரும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.