Published : 12 Jun 2020 08:00 PM
Last Updated : 12 Jun 2020 08:00 PM

கேரளாவில் இன்று 78 பேருக்குக் கரோனா, 1303 பேருக்கு சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தகவல் 

கேரளத்தில் இன்று 78 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் இன்று (வெள்ளிக்கிழமை) திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’’கேரளாவில் இன்று 78 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 14 பேரும், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 5 பேரும், கொல்லம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 4 பேரும், கோட்டயம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேரும், திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 31 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 10 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 7 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 3 பேர் மலப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயதான உஸ்மான் குட்டி என்பவர் கரோனா பாதித்து இறந்துள்ளார். ஜூன் 9-ம் தேதி மும்பையில் இருந்து ரயில் மூலம் இவர் வந்தார். இவருக்குக் கடுமையான நுரையீரல் நோயும், இதய நோயும் இருந்தது. இதையடுத்து கேரளாவில் கரோனா பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் இருந்த 32 பேர் இன்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 7 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 6 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், தலா 4 பேர் இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 2 பேர் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் திருவனந்தபுரம், கோட்டயம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இதுவரை நோயிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 999 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 1303 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 2,27,402 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2, 25 ,417 பேர் வீடுகளிலும் 1,985 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர்.

இன்று கரோனா அறிகுறிகளுடன் 242 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 5,001 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரை 1,06,850 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 3,392 பரிசோதனை முடிவுகள் வர உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 28,356 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 26,143 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,40,457 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்று புதிதாக 9 நோய்த் தீவிரமுள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் பட்டியலில் இருந்து இன்று 14 பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் 128 நோய்த் தீவிரமுள்ள பகுதிகள் உள்ளன’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x