Last Updated : 12 Jun, 2020 01:57 PM

 

Published : 12 Jun 2020 01:57 PM
Last Updated : 12 Jun 2020 01:57 PM

கேரளத்தின் முதல் பழங்குடியினப் பெண் ஆட்சியர்: சாதித்த கூலித்தொழிலாளி மகளின் கடந்து வந்த பாதை

மாவட்ட ஆட்சியர் சாம்பசிவ ராவ் முன் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீதன்யா சுரேஷ்.

கோழிக்கோடு

கேரள மாநிலத்தின் வரலாற்றிலேயே பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆட்சியராக (துணை ஆட்சியர்) ஸ்ரீதன்யா சுரேஷ் நேற்று கோழிக்கோடு மாவட்டத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேரள மாநிலம் பல்வேறு சிறந்த முன்னுதாரணங்களை தன்னக்கத்தே கொண்டது. பழங்குடியனத்தில் முதல் பெண் ஆட்சியர் இப்போது வந்துள்ளார். இதற்குமுன் பார்வைச் சவால்கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவரை ஆட்சியராக அமரச்செய்து அழகுபார்த்தது குறிப்பிடத்தக்கது.

வயநாட்டில் பொழுதனா பஞ்சாயத்தைச் சேர்ந்த ஸ்ரீதன்யா பழங்குடியினத்தில் குறிச்சியா பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த 2018-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேசிய அளவில் 410-வது ரேங்க் பெற்றார்.

ஐஏஎஸ் பயிற்சி முடித்து திருவனந்தபுரம் வந்த ஸ்ரீதன்யா சுரேஷ் கடந்த இரு வாரங்களாக தனிமை முகாமில் இருந்து நேற்று கோழிக்கோடு வந்தார். ஆட்சியர் சாம்பசிவா ராவ் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்

மாவட்ட ஆட்சியர் சாம்பவ சிவராவ் தான், ஸ்ரீதன்யா சுரேஷ் சிவில் சர்வீஸ் தேர்வெழுதத் தூண்டுகோலாகவும், ஊக்கமாகவும் அமைந்தார். கடந்த 2016-ம் ஆண்டு வயநாட்டில் துணை ஆட்சியராக சாம்பசிவ ராவ் பணியாற்றிய நேரத்தில் பழங்குடியினத் துறையில் திட்ட உதவியாளராக ஸ்ரீதன்யா பணியாற்றி வந்தார். அப்போது அவர் அளித்த ஊக்கம், தூண்டுகோலால் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி தற்போது அவர் தலைமையின் கீழ் துணை ஆட்சியராக ஸ்ரீதன்யா பொறுப்பேற்றார்

வயநாட்டில் உள்ள தரியோடு கிராமத்தில் நிர்மலா அரசுப் பள்ளியில் படித்த ஸ்ரீதன்யாவின் பெற்றோர் தினக்கூலிகளாக இருந்து வருகின்றனர். தரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த ஸ்ரீதன்யா, கோழிக்கோடு புனித ஜோஸப் கல்லூரியில் விலங்கியல் இளங்கலைப் பட்டமும், காலிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பயின்றார்.

கோழிக்கோடு மாவட்ட உதவி ஆட்சியராகப் பதவி ஏற்ற ஸ்ரீதன்யா நிருபர்களிடம் கூறுகையில், “நான் முதுகலைப் படிப்பு முடித்தபின் வயநாட்டில் பழங்குடியினத் துறையில் சில மாதங்கள் திட்ட உதவியாளராகப் பணிபுரிந்தபோது அங்கு துணை ஆட்சியராக இருந்த சாம்பசிவராவுடன் பலமுறை பேசியிருக்கிறேன்.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத அதிகமான ஊக்கம் அளித்துத் தூண்டுகோலாக இருந்தார். அவருக்கு மக்கள் அளித்த மரியாதை என்னை உத்வேகப்படுத்தியது. மிகப்பெரிய பொறுப்புக்கு வந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சாம்பசிவ ராவ் கூறுகையில், “என்னுடைய 8 ஆண்டுகால வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணம். மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்ற உத்வேகத்தோடு படித்த ஸ்ரீதன்யா வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பதவில் ஆட்சியர் ஸ்ரீதன்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், ''சமூகரீதியாக இருந்த பிற்போக்கை மீறி, போராடி மாவட்டஆட்சியராக ஸ்ரீதன்யா வந்துள்ளது மகிழ்ச்சி. பல வண்ணக்கனவுகளோடு வந்துள்ள அவருக்கு வாழ்த்துகள். அவரின் சாதனை எதிர்காலத்தில் மாணவர்கள், இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x