

தெலங்கானா மாநில பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் மாநிலத்தில் கரோனா சூழல் குறித்துப் பேசுவதற்காக முதல்வர் கே.சந்திரசேகர் ராவைச் சந்திக்கப் புறப்படும்போது அவர்களை போலீஸார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
பாஜக தலைவர்கள் கே.லட்சுமணன், என்.எம்எல்சி ராமச்சந்தர் ராவ், எம்எல்ஏ ராஜா சிங் ஆகியோர் சேர்ந்து மாநிலத்தில் கரோனா நிலை குறித்துப் பேசி, முதல்வர் சந்திரசேகர் ராவிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தார்கள்.
தெலங்கானா மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி 4,320 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 165 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாகப் பேசவும், கரோனா பரவல் தொற்றைத் தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் முதல்வர் கே.சந்திர சேகர் ராவை இன்று சந்திக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தபோது அவர்களை போலீஸார் தடுத்து வீ்ட்டுக்காவலி்ல் வைத்துள்ளனர்.
இதுகுறித்து பாஜக மூத்ததலைவர் லட்சுமணன் ஏஎன்ஐ நிருபரிடம் கூறுகையில், “மாநிலத்தில் கரோனா சூழல் குறித்துப் பேசவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் சந்திரசேகர் ராவைச் சந்தித்துப் பேசி மனு அளிக்க நானும், பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரும் திட்மிட்டிருந்தோம். ஆனால் நாங்கள் புறப்படும் முன் போலீஸார் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை வெளியே விடாமல் வீட்டுக்குள் காவல் வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.