Published : 11 Jun 2020 10:44 PM
Last Updated : 11 Jun 2020 10:44 PM

ஜேஇஇ, நீட் மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் செயலி; 65 லட்சம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி

புதுடெல்லி

கொவிட்-19 பரவும் இந்தச் சிக்கலான சூழலில், ஆன்லைன் பயிற்சி வசதியை அளிக்கும் வகையில், செயலியை என்டிஏ தொடங்கியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். சுமார் 65 லட்சம் மாணவர்கள் ஏற்கனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று இந்தியா தரவரிசை 2020 என்னும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். பல்வேறு பிரிவுகளிலும், ஐந்து விரிவான அம்சங்களில், அந்த நிறுவனங்களின் திறன் அடிப்படையில், இது வெளியிடப்பட்டுள்ளது.

மனித வள மேம்பாட்டு இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே முன்னிலையில் 10 பிரிவுகள் அடிப்படையில் அமைச்சர் வெளியிட்டார்.

2020 இந்தியா தரவரிசைக்கு, மொத்தம் 3771 தனித்துவ நிறுவனங்கள் தானாகவே முன்வந்து விண்ணப்பித்தன. ஒட்டுமொத்தம், குறிப்பிட்ட பிரிவு, பிராந்திய அடிப்படையில் அவை விண்ணப்பித்திருந்தன. தரவரிசைக்கு வந்திருந்த 5805 விண்ணப்பங்களில், இந்த 3771 தனித்துவ விண்ணப்ப நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகள், பிராந்தியங்களின் கீழ், ஏற்கப்பட்டன.

இதில், 294 பல்கலைக்கழகங்கள், 1071 பொறியியல் கல்வி நிறுவனங்கள், 630 மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 334 மருந்துவத் துறை நிறுவனங்கள், 97 சட்டக்கல்வி நிறுவனங்கள், 118 மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 48 கட்டடக்கலை கல்வி நிறுவனங்கள், 1659 பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரிகள் அடங்கும். இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு தரவரிசையில் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்றிருப்பது, இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் நியாயமான, வெளிப்படையான முறையில் தரவரிசை மதிப்பீடு இருப்பதை உறுதி செய்கிறது.

2019-இல் 3127 ஆக இருந்த தரவரிசைக்கான தனித்துவ விண்ணப்பங்கள், 2020-இல் 3771 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் பல்வேறு பிரிவுகளுக்கான மொத்த விண்ணப்பங்கள் 2019-இல் 4873-ல் இருந்து 2020-இல் 5805 ஆக உயர்ந்துள்ளது. தனித்துவ நிறுவனங்களில் 644-ம், மொத்த விண்ணப்பங்களில் 932-ம் அதிகரித்துள்ளன.

நடைமுறையில், பொறியியல் கல்வியில் 200 நிறுவனங்களும், ஒட்டுமொத்தமாகவும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பிரிவிலும் 100 நிறுவனங்களும், மேலாண்மை மற்றும் மருந்துத் துறையில் தலா 75 நிறுவனங்களும், மருத்துவத்தில் 40 நிறுவனங்களும், கட்டடக்கலை மற்றும் சட்டக்கல்வியில் தலா 20 நிறுவனங்களும், 30 நிறுவனங்கள் முதன்முறையாக பல் மருத்துவப் பிரிவிலும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

உரிய முறையில் கோர்க்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு கூடுதல் தரம் வழங்கப்பட்டு வருகிறது. தர வரிசை நிறுவனங்களின் தரவுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பொருத்தமற்றவை, முரண்பாடுகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அடையாளம் காணப்படுகின்றன. இந்த நடைமுறைகளுக்கு விடாமுயற்சியும், பொறுமையும், நிறுவனங்களைக் கையாளும் உத்தியும் மிகவும் அவசியமாகும்.

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. 2020-இல் ஒன்பது தரவரிசையில், கூடுதலாக ‘’ பல் மருத்துவம்’’ முதல் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 10 பிரிவுகளில் இது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்தத் தரவரிசை சில வகை அளவுகோல்கள் அடிப்படையில் பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் என்றார். பல்கலைக் கழகங்களுக்கு, பல்வேறு தர அம்சங்கள் மற்றும் அளவுகோல்களில் தங்கள் திறனை முன்னேற்றிக்கொள்ளவும், ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் தேவைப்படும் பிரிவுகளை அடையாளம் காணவும் இது பயன்படும் என்று அவர் கூறினார்.

மேலும், தேசிய அளவிலான நிறுவனங்களின் இந்தத் தரவரிசை, அவற்றுக்கு இடையே போட்டி உணர்வை ஊக்குவித்து, மிகச் சிறப்பாக செயல்பட்டு, சர்வதேச அளவில் உயரிய இடத்தைப் பிடிக்கவும் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பை உருவாக்க முக்கிய முன்முயற்சியை எடுத்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர்கல்வியில் பல்வேறு பிரிவுகள் மற்றும் அறிவுக் களங்கள் அடிப்படையில் இது பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், நம் அனைவருக்கும் இது ஊக்குவிப்பு ஆதாரமாக உள்ளது என்றும் பொக்கிரியால் தெரிவித்தார்.

இந்த நடைமுறை, நிறுவனங்கள் தரவுகளை அமைத்துக்கொள்ளும் பழக்கத்தை உருவாக்கியுள்ளதுடன், இந்த நிறுவனங்கள் தங்களுக்குள் மேலும் முன்னேறவேண்டும் என்ற போட்டியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பில் அடையாளம் காணப்பட்ட அகன்ற அளவுகோல்கள் , உயர் கல்வி நிறுவனங்களில் கற்பித்தல், கற்றல், ஆதாரங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்ட முடிவுகள் போன்ற அனைத்து முக்கிய அம்சங்களையும் வெற்றிகரமாக கையாள வழிவகுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்தியச் சூழலுக்கு பொருத்தமான பிராந்திய பன்முகத்தன்மை, களப்பணி, பாலியல் சமத்துவம், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளை உள்ளடக்குதல் ஆகிய நாடு சார்ந்த அளவுருக்கள் தரவரிசை முறையில் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அனைத்து அளவுருக்கள் மற்றும் உப அளவுருக்கள், நிறுவனத்தின் அளவு, பழமை ஆகியவற்றைப் பார்க்காமல் இயல்பாக்கப்பட்டுள்ளதன் மூலம், பெரிய மற்றும் பழமையான நிறுவனங்கள் தேவையற்ற ஆதாயம் அடையமுடியாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.

கொவிட்-19 பரவும் இந்தச் சிக்கலான சூழலில், ஆன்லைன் பயிற்சி வசதியை அளிக்கும் வகையில், ஜேஇஇ , நீட் மாணவர்களுக்கு தேசிய டெஸ்ட் அபியாஸ் என்னும் செயலியை என்டிஏ தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். சுமார் 65 லட்சம் மாணவர்கள் ஏற்கெனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர் எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x