Published : 11 Jun 2020 10:07 PM
Last Updated : 11 Jun 2020 10:07 PM

அயல்நாட்டு உயிரினங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

உயிருடன் உள்ள அயல்நாட்டு உயிரினங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்வதற்கும் வைத்திருப்பதற்குமான நடைமுறைகளை சீரமைக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

தாயகம் சாராத உயிரின வகைகள் என்பவை, தங்களது இயல்பான உள்ளூர்ச் சூழலில் இருந்து புதிய சூழலுக்கு கொண்டுவரப்பட்ட தாவரம் அல்லது விலங்கினம் ஆகும். அருகி வரும் உயிரினம் சார்ந்த சர்வதேச வர்த்தகம் குறித்த ஒப்பந்தப் (Convention on International Trade in Endangered Species - CITES ) பட்டியலில் இடம் பெற்றுள்ள அயல்நாட்டு உயிரின வகைகளை நாட்டின் குடிமக்கள் பலர் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

ஆனால், இத்தகைய உயிரினங்கள் குறித்த ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு ஏதும் மாநில / மத்திய அரசுகளிடம் இல்லை. எனவே, இத்தகைய உயிரின வகைகளை வைத்திருப்போரிடமிருந்து அவர்களாகவே முன்வந்து அளிக்கும் அடிப்படையில் அவை குறித்த தகவல்களைச் சேகரிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மக்கள் வைத்திருக்கும் இத்தகைய விலங்குகள், புதிய வம்சாவளி உயிரினம், இறக்குமதி செய்யப்பட்ட அல்லது பரிமாறிக் கொள்ளப்பட்ட இத்தகைய உரினங்கள் குறித்து இந்தப்பதிவுகள் மேற்கொள்ளப்படும். இதனால் இந்த உயிரினங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட ஏதுவாகும்.

மேலும் இவற்றை வைத்திருப்போருக்கு சரியான கால்நடைப் பராமரிப்பு, அவற்றுக்கான வாழ்விட வசதி மற்றும் அவற்றின் நல்வாழ்வு சார்ந்த அம்சங்கள் குறித்து வழிகாட்டவும் இந்த நடவடிக்கை உதவும். தாயகம் சாராத உயிரின வகைகளின் தரவுத் தொகுப்பு, விலங்கினம் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் உதவுவதுடன், விலங்குகள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நெறிமுறைகள் கிடைக்கவும் வழிவகுக்கும்.

இந்த ஆலோசனை நெறிமுறை அறிவிக்கப்பட்ட ஆறு மாத காலத்திற்குள் இத்தகைய அயல்நாட்டு உயிரின வகைகள் குறித்த பிராமண அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தால் அதன் உரிமையாளர் மேற்கொண்டுஎவ்வித ஆவணமும் அளிக்க அவசியமில்லை .

ஆறுமாத காலத்திற்குப் பின் அறிக்கை செய்யும் போது அத்தகையோர் அமலில் உள்ள சட்டங்கள், வரன்முறைகள் அடிப்படையில் ஆவண அறிக்கை செய்ய வேண்டும்.

இத்தகைய அயல்நாட்டு உயிரின வகைகளை வைத்திருப்போர், (www.parivesh.nic.in) என்ற வலைத்தளத்தைப் பார்த்து, உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து இருப்புப் பதிவு நடைமுறையை முழுமை அடையச் செய்ய வேண்டும்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x