Published : 11 Jun 2020 05:46 PM
Last Updated : 11 Jun 2020 05:46 PM
டெல்லி ஜூம்மா மசூதியில் ஜூன் 30ம்- தேதி வரை கூட்டுத் தொழுகை கிடையாது என இமாம் செய்யது அகமது புகாரி அறிவித்துள்ளார்.
டெல்லியில் கரோனா வைரஸின் தாக்கம் 4-வது லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மே 28-ம் தேதியிலிருந்து கடந்த 4-ம் தேதி வரை நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுவிட்டதால் மக்கள் எந்தவிதமான தடையும் இன்றி உலாவி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களில் டெல்லியில் உயிரிழப்பு 700-க்கும் மேலாக அதிகரித்தது.
அதுமட்டுமல்லாமல் சமூகப் பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 11 நாட்களாக படிப்படியாக் குறைந்து 39 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது.
டெல்லியில் கரோனா வைரஸ் பரவலை எவ்வாறு சமாளிப்பது என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க கடந்த மே 2-ம் தேதி 5 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைத்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவனையின் முன்னாள் இயக்குநர் என்.கே.கங்குலி டெல்லியில் சமூகப்பரவல் தொடங்கிவிட்டதாக அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் டெல்லி ஜூம்மா மசூதியில் ஜூன் 30ம்- தேதி வரை கூட்டுத் தொழுகை கிடையாது என இமாம் செய்யது அகமது புகாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பொது மக்கள் மற்றும் மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை கேட்டறிந்தேன். அதனடிப்படையில் இன்று மாலை முதல் ஜூன் 30ம்- தேதி வரை கூட்டுத் தொழுகை நடைபெறாது.’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT