Published : 10 Jun 2020 08:14 PM
Last Updated : 10 Jun 2020 08:14 PM

கேரளாவில் இன்று 65 பேருக்குக் கரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் 

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று 65 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாக, அம்மாநிலச் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா திருவனந்தபுரத்தில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’’கேரளாவில் இன்று 65 பேருக்குக் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 9 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 7 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா 6 பேர் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம் வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், தலா 3 பேர் பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் ஆலப்புழா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 34 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 25 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இன்று 5 பேருக்கு நோய் பரவியுள்ளது. இவர்களில் தலா 2 பேர் திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் கோழிக்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவர்.

கடந்த 7-ம் தேதி திருச்சூர் மாவட்டத்தில் மரணமடைந்த 87 வயதான குமாரன் என்பவரின் உமிழ்நீர் மாதிரி, பரிசோதனைக்காக ஆலப்புழாவில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இந்தப் பரிசோதனை அறிக்கை இன்று வந்துள்ளது. இதில் குமாரனுக்குக் கரோனா பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இன்று 57 பேர் கரோனாவிலிருந்து குணமாகி உள்ளனர்.

இவர்களில் 13 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 11 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 7 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், தலா 6 பேர் பத்தனம்திட்டா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 3 பேர் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா 2 பேர் கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனா நோயிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 905 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,238 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,689 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 98,304 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 93,475 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும், சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 24,508 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 22,950 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. 6,364 மறு பரிசோதனை உள்பட இதுவரை மொத்தம் 1,31,006 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்று நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளில் 5 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளது’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x